பேசாமலேயே போய் விட்ட சிங்கம்.. !
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி என்றதுமே அந்த கரகரத்தக் குரல்தான். அந்தக் குரலை கடைசி நேரத்தில் தமிழகம் கேட்காமலேயே போய் விட்டது.
கருணாநிதி உடல் நலம் குன்றியிருந்தபோது அவரை சந்தித்த கவிஞர் வைரமுத்து இந்தக் குரலை வைத்து ஒரு கவிதை எழுதி அதை கருணாநிதியிடமே வாசித்தும் காட்டினார். அமைதியாக அந்தக் கவிதையை கேட்டுக் கொண்டார் கருணாநிதி.

அந்தக் கவிதை இதோ:
பிடர் கொண்ட சிங்கமே பேசு
இடர்கொண்ட தமிழ்நாட்டின்
இன்னல்கள் தீருதற்கும்
படர்கின்ற பழைமை வாதம்
பசையற்றுப் போவதற்கும்
சுடர் கொண்ட தமிழைக் கொண்டு
சூள் கொண்ட கருத்துரைக்கப்
பிடர் கொண்ட சிங்கமே
நீ பேசுவாய் வாய் திறந்து
யாதொன்றும் கேட்கமாட்டேன்
யாழிசை கேட்கமாட்டேன்
வேதங்கள் கேட்கமாட்டேன்
வேய்க்குழல் கேட்கமாட்டேன்
தீதொன்று தமிழுக் கென்றால்
தீக்கனல் போலெழும்பும்
கோதற்ற கலைஞரே
நின்குரல் மட்டும் கேட்க வேண்டும்
இடர்கொண்ட தமிழர் நாட்டின்
இன்னல்கள் தீருதற்கும்
படர்கின்ற பழைமை வாதம்
பசையற்றுப் போவதற்கும்
சுடர் கொண்ட தமிழைக் கொண்டு
சூள் கொண்ட கருத்துரைக்கப்
பிடர் கொண்ட சிங்கமே
நீ பேசுவாய் வாய் திறந்து...
கடைசி வரை பேசாமலேயே போய் விட்டார் கருணாநிதி. தமிழகம் தத்தளித்துப் பரிதவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அதைக் கண்டும் ஏதும் செய்யவியலாமல் போனது அவரது மனதை நிச்சயம் அரித்தெடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.












Click it and Unblock the Notifications