அப்பாவி தமிழர்களை கொன்ற ராஜபக்சேவுக்கு பாரத ரத்னாவா?: வைகோ கேள்வி
சென்னை: வாஜ்பாய் தன்னுடைய மகன் போல என்னை நடத்தினர். என்னை செல்லப்பிள்ளை என்று அனைவரிடமும் கூறுவார். ஆனால் கூட்டணிக் கட்சித்தலைவர்களை மதிக்கும் பண்பு மோடியிடம் இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது தரவேண்டும் என்று வலியுறுத்துவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
லோக்சபா தேர்தலின் போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த மதிமுக, தற்போது பாஜக உறவை முறித்துக் கொள்வதாகவும், கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும், கூட்டணியில் இருந்து விலகுவதற்கான காரணத்தை வைகோ செய்தியாளர்களிடம் விளக்கினார்.
வாஜ்பாய் காலத்தில் இருந்த தேசிய ஜனநாயகக்கட்சி கூட்டணி எப்படி இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது என்றும் அவர் பேசினார்.
வாஜ்பாய் தனது சொந்த மகனைப்போல என்னை நடத்தினார். என்னை செல்லப்பிள்ளை என்றுதான் அனைவருக்கும் அறிமுகம் செய்வார்.
எல்லோரும் கைவிட்ட என்.எல்.சி பிரச்சினையில் எளிதாக தீர்வு கண்டவர். நள்ளிரவு 11 மணியளவில் நான் வைத்த வேண்டுகோளை ஏற்று என்.எல்.சி தனியார் மயமாக்கலை கைவிட்டவர் வாஜ்பாய் என்று கூறினார் வைகோ.
இன்றைக்கு அவர் நினைவு தப்பி, நடமாட்டம் இன்றி இருக்கிறார். டெல்லி செல்லும்போதெல்லாம் நான் வாஜ்பாயை பார்த்துவிட்டுத்தான் வருவேன் என்றும் வைகோ கூறினார்.
இலங்கை அதிபர் ராஜாபக்சேவுக்கு பாரத ரத்னா கொடுக்கவேண்டும் என்று சுப்ரமணியசுவாமி கூறுவது கண்டிக்கத்தக்கது என்று கூறிய வைகோ, அப்பாவி மக்களை கொன்ற ராஜபக்சேவுக்கு பாரத ரத்னாவா என கேள்வி எழுப்பினார்.