வீடு புகுந்து சிறுமியைக் கடத்தி பலாத்காரம் செய்ய முயற்சி... டிரைவர் கைது
காரைக்குடி: காரைக்குடி அருகே நள்ளிரவில் திறந்திருந்த வீட்டில் புகுந்து, தூங்கிக் கொண்டிருந்த சிறுமியைத் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்ய முற்பட்ட வேன் டிரைவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
காரைக்குடி அருகே உள்ள கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த ராமநாதன் (36), மினி சரக்கு வேன் ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று நள்ளிரவில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்த ராமநாதன், வழியில் திறந்த நிலையில் கிடந்த வீட்டில் 11 வயது சிறுமி உறங்குவதைக் கண்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து வீட்டிற்குள் நுழைந்த ராமநாதன் அச்சிறுமியைக் கடத்தி, தனது வேனில் அருகில் இருந்த லாரி செட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியைப் பலாத்காரம் செய்ய அவர் முயற்சித்துள்ளார்.
அப்போது சிறுமி அழுது தண்ணீர், தண்ணீர் என கத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து ராமநாதன் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். இதனை தனக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொண்ட அச்சிறுமி அங்கிருந்து தப்பி, தனது வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.
தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை அவர் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் திரண்டு அருகில் உள்ள சோதனைச் சாவடியில் இதனைத் தெரிவித்துள்ளனர். விரைந்து செயல்பட்ட போலீசார் லாரி செட்டில் பதுங்கியிருந்த ராமநாதனைக் கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து காரைக்குடி அனைத்து மகளிர் போலீசார் ராமநாதன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
சினிமா காட்சி போல் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் காரைக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications