"வந்தே மாதரம்" வங்க மொழியில் எழுதப்பட்ட சமஸ்கிருத பாடலாம்.. ஹைகோர்ட்டில் தமிழக அரசு!
சென்னை: வந்தே மாதரம் பாடல் வங்க மொழியில் எழுதப்பட்ட சமஸ்கிருத பாடல் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை வரும் திங்கட் கிழமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
அரசு உயர்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் வந்தே மாதரம் பாடல் முதலில் எந்த மொழியில் இயற்றப்பட்டது என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

அதற்கு வங்க மொழி, உருது, மராத்தி, சமஸ்கிருதம் என நான்கு விடைகள் கொடுக்கப்பட்டு, சரியானதை தேர்வு செய்யுமாறு கூறப்பட்டது. இதற்கு வங்கமொழி என மனுதாரர் வீரமணி பதிலளித்துள்ளார.
பாட புத்தகத்தில் வங்கமொழி என்றே கூறப்பட்டுள்ளதால், அந்த விடையை எழுதிய தனக்கு ஒரு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும் தனக்காக ஒரு ஆசிரியர் பணியிடத்தை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கோரியும் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதி எம்.வி.முரளிதரன், வந்தே மாதரம் முதலில் வங்க மொழியில் இயற்றப்பட்டதா, சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டதா என பதிலளிக்கும்படி தமிழக அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வந்தே மாதரம் வங்க மொழியில் எழுதப்பட்ட சமஸ்கிருத பாடல் என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், மனுதாரருக்கு ஒரு மதிப்பெண் வழங்கினாலும் அவர் தேர்ச்சியடைய மாட்டார் எனவும் அரசு வக்கில் கூறினார்.
அரசு தலைமை வழக்கறிஞரின் பதிலைக் கேட்ட நீதிபதி இந்த வழக்கின் தீர்ப்பை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications