கல்வி உரிமை மாநாடு: சேலத்தில் குவிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்
சேலம்: சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கல்வி உரிமை மாநாடு இன்று மாலை நடக்கிறது. இதில் கலந்து கொள்ள சேலத்தில் கட்சி தொண்டர்கள் குவிந்துள்ளனர். தொண்டர்கள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சேலத்தை அடுத்து உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கல்வி உரிமை மாநில மாநாட்டை இன்று மாலை நடத்துகிறது. இந்த மாநாட்டுக்கு சேலம் மாவட்ட எஸ்.பி. சக்திவேல் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் சேலம் மாவட்ட செயலாளர் நாவசரன் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அவர்களின் மனுக்களை விசாரித்த நீதிமன்றம் சில நிபந்தகனைகளுடன் மாநாட்டை நடத்த அனுமதி அளித்தது. இதையடுத்து மாநாட்டிற்கு தொண்டர்கள் வாடகை வாகனங்களில் வர தடை விதித்து சேலம் மாவட்ட கலெக்டர் நேற்று மாலை 144 தடை உத்தரவை பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் 144 தடை உத்தரவை ரத்து செய்தது. இதையடுத்து திருமாவளவன் கூறுகையில்,
சட்டம் ஒழுங்கை காக்க வேண்டும் என்பதை விட அரசியல் ரீதியாக பழி வாங்கவே இந்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிகிறது. நேற்று இரவு ஆயிரக்கணக்கான வாகனங்களை போலீசார் தடுத்தி நிறுத்தியதுடன் கட்சியினரையும் கைது செய்துள்ளனர். மேலும் தனியார் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்களை போலீசார் மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று இந்த வழக்கை விசாரிக்க அனுமதி அளித்த நீதிபதிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் கட்டுப்பாட்டை காப்பதுடன், நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளை ஏற்று நடக்க வேண்டும் என்றார்.
மாநாட்டையொட்டி கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் தொண்டர்கள் குவிந்துள்ளனர். மாநாடு நடக்கும் இடத்தில் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கருணாநிதியிடம் வாழ்த்து
முன்னதாக தனது பிறந்த நாளையொட்டி திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து திருமாவளவன் பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார்.