இழிவுபடுத்தும் 'கொம்பன்' படத்தை தடை செய்க: டாக்டருடன் கை கோர்த்த 'சிறுத்தை' திருமா!
சென்னை: தமிழகத்தில் மிகமோசமான சமூக மோதலான முதுகுளத்தூர் வன்முறைகளை நினைவூட்டும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படும் நடிகர் கார்த்தி நடித்துள்ள 'கொம்பன்' திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
கொம்பன் திரைப்படம் முதுகுளத்தூர் வன்முறைகளின் பின்னணியில் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இது தொடர்பாக திரைப்பட தணிக்கைத் துறையில் புகார் மனு கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 70க்கும் மேற்பட்ட இடங்களில் சர்ச்சைக்குரிய வசனங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த திரைப்படம் வெளியானால் தென்மாவட்டங்களில் சமூக மோதல்கள் வெடிக்கும் என்று கூறி நீதிமன்றத்திலும் டாக்டர் கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்தார். அதே நேரத்தில் கொம்பன் திரைப்படத்தை எதிர்க்கக் கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் விழுப்புரத்தில் 2001ஆம் ஆண்டு அரசுப் பேருந்து எரிக்கப்பட்டது தொடர்பாக வழக்குக்காக நீதிமன்றத்தில் ஆஜராக திருமாவளவன் நேற்று வந்திருந்தார். இந்த வழக்கில் இருந்து அவர் உட்பட் 17 பேர் விடுவிக்கப்பட்டதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் 'கொம்பன்' திரைப்படம் குறித்து கூறியதாவது:
விரைவில் வெளிவர உள்ள 'கொம்பன்' திரைப்படத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. அந்த காட்சிகளை நீக்க வேண்டும். இந்த படத்தை தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.












Click it and Unblock the Notifications