வேதாளம் படம் பார்க்க செல்லும் அஜித் ரசிகர்களால் கலவர பூமியான தமிழ்நாடு! போலீஸ் குவிப்பு
மதுரை: வேதாளம் திரைப்படம் பார்க்க சென்ற அஜித் ரசிகர்கள் செய்த வன்முறை செயல்களால் மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.
அஜித் நடித்த வேதாளம் திரைப்படம் தீபாவளி நாளான நவம்பர் 10ல் ரிலீஸ் ஆனது. தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் அதிகாலை 3.30 மணிக்கு ரசிகர்களுக்காக முதல் காட்சி திரையிடப்பட்டது.
மதுரையில் உள்ள தமிழ் ஜெயா திரையரங்கிலும் இதுபோல காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகும் படம் காட்டப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டதாம்.

ரசிகர்களுக்கு பதற்றம்
பிற தியேட்டர்களில் 3.30 மணிக்கே படம் தொடங்கிய நிலையில், தங்களால் முதலில் படத்தை பார்க்க முடியவில்லையே, சமூக வலைத்தளங்களில் தங்களால் உடனடியாக படம் குறித்து கருத்தை போட முடியவில்லேயே என்ற ஏக்கம் அஜித் ரசிகர்களுக்கு கோபமாக மாறியது. இதையடுத்து தியேட்டர் வளாகத்திலும், வெளியே சாலையிலும் ரசிகர்கள் கலாட்டாவில் ஈடுபட்டனர்.

பொதுச்சொத்து
சாலையில் சென்றுகொண்டிருந்த அரசு பஸ்கள் மீது சம்மந்தமேயின்றி கற்களை வீசி வன்முறை வெறியாட்டம் நடத்தினர். குடி போதையில் இருந்த ரசிகர்கள் சிலர், பஸ்சுக்குள் ஏறிச்சென்று, பயணிகளின் கால்களுக்கு அடியில் பட்டாசுகளை கொளுத்திப்போட்டு அவர்கள் அலறி ஓடுவதை பார்த்து ரசித்தனர். இதில் 2 பயணிகளுக்கு காயமேற்பட்டது. 4 பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன.

ஆட்டோ பாவம்
சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோவை ஒரு கும்பல் கவிழ்த்து, அது உடைந்து நொறுங்குவதை பார்த்து ரசித்தது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், வன்முறை வெறியாட்டம் நடத்திய ரசிகர்கள் மீது தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

போலீசாருக்கு காயம்
திருநகரில் உள்ள மணின்பாலா தியேட்டரிலும் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டு, அரசு பஸ் ஒன்றின் கண்ணாடிகளை உடைத்தனர். அவர்கள் மீதும் காவல்துறையின் லத்தி பாய்ந்தது. பாலவாக்கத்தில் உள்ள மதி தியேட்டரில் ரகளையில் ஈடுபட்ட ரசிகர்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது கல்வீசப்பட்டது. இதில் சில போலீசார் காயமடைந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் முதல் நாளில் மதுரை பகுதியை போர்க்களமாக்கின.

டிக்கெட்டுக்காக வன்முறை
இந்நிலையில், நேற்று படம் வெளியான 2வது நாளிலும் கலவரம் நடந்துள்ளது. ராமநாதபுரம் பஸ் நிலையம் பின்புறம் உள்ள திரையரங்கு ஒன்றில் பகல் காட்சியினை காண கட்டுக்கடங்காத கூட்டம் திரையரங்கம் முன்பு திரண்டிருந்தது. காட்சிக்கான டிக்கெட்டுகள் கொடுக்க ஆரம்பித்த போது ரசிகர்கள் டிக்கெட் எடுக்க முண்டியடித்து கொண்டிருந்தனர். இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் சிலர் திரையரங்கின் சுவரில் ஏறிக்குதித்து உள்ளே சென்றனர். அவர்களிடம் டிக்கெட் கேட்ட திரையரங்க ஊழியர்களிடம் ரசிகர்கள் தகராறு செய்தனர்.

கல்வீச்சு
இந்நிலையில், திரையரங்கத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த ரசிகர்கள் திரையரங்கினை நோக்கி கற்களை வீசியுள்ளனர். தகராறில் ஈடுபட்ட ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் சிதறி ஓடிய ரசிகர்கள் திரையரங்க வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை கீழே தள்ளிவிட்டு அவை நொறுங்குவதை பார்த்து ரசித்தபடி, தப்பி ஓடினர்.

போலீஸ்காரர் காயம்
தப்பி ஓடிய ரசிகர்கள் கல்வீசி தாக்கியதில் ஆயுதப்படை போலீஸ்காரர் தாமரைசெல்வன் தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். தகராறு ஏற்படாமல் இருக்க வேதாளம் திரையிடப்படும் திரையரங்கங்கள் முன்பாக ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications