கோயம்பேட்டில் சகாய விலையில் கிடைக்கும் காய்கறிகள் – வரத்து அதிகமானதால்!
சென்னை: சென்னையில் காய்கறி வரத்து அதிகமானதால் விலை குறைந்து வருகிறது.
தமிழகத்தில் மழைக்காலத்தில் காய்கறி விளைச்சல் சற்று குறையும். இதனால் விலை அதிகரிக்கும். குறிப்பாக சென்னையில் விலை கடும் உயர்வைச் சந்திக்கும்.
இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் மழை காலம் முடிந்து விட்டதால் காய்கறிகள் விளைச்சல் அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஓசூர், பெரிய பாளையம், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், ஊட்டி பகுதிகளில் இருந்து அதிக அளவில் காய்கறிகள் சென்னைக்கு வரத் தொடங்கி உள்ளது.
இது மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் அதிகம் வருகிறது.
இதன் காரணமாக கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் காய்கறிகள் வந்து குவிந்து கொண்டுள்ளன. மேலும் விலையும் வெகுவாக குறைந்து காணப்படுகிறது.
கத்தரிக்காய் கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்து 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நாட்டு தக்காளி கிலோ ரூபாய் 15க்கும், தக்காளி ரூபாய் 25க்கும் விற்கப்படுகிறது.
இதேபோல மேலும் பல காய்கறிகளின் விலையும் குறைந்து காணப்படுவதால் மக்கள் குறிப்பாக தாய்மார்கள் காய்கறிகளை அதிக அளவில் சந்தோஷத்துடன் வாங்கிச் செல்வதைக் காண முடிகிறது.