வேலூரில் சுட்டெரிக்கும் வெயில்... அனல் காற்றால் மக்கள் அவதி !
வேலூர்: வேலூரில் சுட்டெரிக்கும் வெயிலுடன் அனல் காற்றும் வீசியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
தமிழகத்தின் தலைநகரம் சென்னையாக இருந்தாலும், வெயிலின் தலைநகராக மாறி வருகிறது வேலூர். வெளியில் தலைகாட்ட முடியாத அளவில் வெயில் வாட்டி வதைக்கிறது. அக்னி நட்சத்திர கால வெயிலை விட அனல் காற்று வீசுகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து சென்றாலே படபடப்பும், மயக்கமும் உயிருக்கே ஆபத்தான நிலையை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக வேலூரில் சராசரியாக 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடும் வெப்பம் காரணமாக, கடுமையான வெப்பக் காற்று வீசியது. அனல் காற்றுக்கு வேலூர்வாசிகள் அவதிக்கு ஆளாகினர். பயணிகளும், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டனர்.
மேலும் பகல் நேரங்களில் மக்கள் வெளியே வரமுடியாமல் வீடுகளுக்குள்ளே முடங்கும் சூழல் உருவாகியது. இதனால், இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. மக்கள் நடமாட்டம் இன்றி முக்கிய சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
மார்ச் மாத தொடக்கத்திலேயே வெயில் சுட்டெரிக்கும் நிலையில், மே மாதத்தில் எப்படியிருக்குமோ, என்ற அச்சம் வேலூர் மக்களிடையே இப்போதே அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications