மீனவர் படகுகளை விடுவிக்கவே முடியாது என்பதா? ராஜபக்சேவின் பேட்டிக்கு தி.வேல்முருகன் கடும் கண்டனம்
சென்னை: தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்கவே முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியிருப்பதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழீழத்தில் ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகளை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி ராஜபக்சே, தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை விடுவிக்கவே முடியாது திமிர்த்தனமாக கூறியிருப்பதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்து ஆங்கில நாளேட்டின் சிறப்பு செய்தியாளர் சுகாசினி ஹைதர் என்பவர், போர்க்குற்றவாளியான ராஜபக்சேவிடம் பேட்டியை எடுத்து வெளியிட்டுள்ளார்.
சு. சுவாமி மகள்
இந்த சுகாசினி ஹைதர் வேறு யாருமல்ல.. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த உலகத் தமிழினத் துரோகியான சிங்களவனிடம் தமிழர்களைக் காட்டிக் கொடுக்கிற கொடியவன் சுப்பிரமணியன் சுவாமியின் மகள்தான்.
அந்த பேட்டியில் பொய் மூட்டைகளை கட்டவிழ்த்துவிட்டு ஆணவமான கருத்துகளை கொட்டி வைத்திருக்கிறான் ராஜபக்சே.
காணாமல் போதல்களுக்கு புலிகள் காரணமா?
2009 இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் பேபி சுப்பிரமணியம், யோகி, கவிஞர் புதுவை ரத்தினதுரை உட்பட பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போயினர். அவர்களது கதி என்ன என்று தெரியவில்லை.
ஆனால் ராஜபக்சேவோ, ராணுவத் தரப்பில் இருந்தும் கூட காணாமல் போயிருக்கின்றனர் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் காணாமல் போதல் சம்பவங்களுக்கெல்லாமே தமிழீழ விடுதலைப் புலிகளே பொறுப்பு என பச்சைப் பொய்யை புளுகியிருக்கிறான்.
கொக்கரிப்பு
அதேபோல் தமிழர் வாழும் வடக்கு மாகாணத்தில் யுத்தம் முடிந்து 5 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் அங்குலத்துக்கு அங்குலமாக சிங்கள ராணுவம் நிலை கொண்டிருக்கிறது. ஆனால் ராஜபக்சேவோ 90% ராணுவம் விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டது என்றும் தன் நாட்டு ராணுவத்தை இந்தியாவிலோ அல்லது வேறு ஒருநாட்டிலா நிறுத்த முடியும் என்றும் கொக்கரித்திருக்கிறான்.
சிங்கள குடியேற்றத்துக்கு ஆதரவு
மேலும் வடபகுதியில் சிங்களக் குடியேற்றம் என்பதெல்லாம் எதுவும் இல்லை என்று கூறுகிற ராஜபக்சே இலங்கையின் குடிமகனாக இருப்பவர் நாட்டின் எந்த ஒரு பகுதியிலும் குடியேறுகிற உரிமை உண்டு என்று சொல்லி சிங்களக் குடியேற்றத்தை நியாயப்படுத்துகிறான்.
ஆணவமாக கருத்து
இப்படி தமிழீழத்தின் உண்மை நிலவரத்தை அப்படியே மூடி மறைத்து வடிகட்டிய பொய்களை மட்டுமே கொட்டி பேட்டியளித்துள்ள ராஜபக்சே தமிழக மீனவர்கள் குறித்து ஆணவமாக அகம்பாவத்தின் உச்சாணிக் கொம்பில் நின்று கொண்டு பேட்டியளித்திருக்கிறான்.
பாரம்பரிய மீன்பிடி உரிமை
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகவும் பறிமுதல் செய்த படகுகளைத் திருப்பித் தர முடியாது என்றும் அடாவடியாக கூறியிருக்கிறான் ராஜபக்சே. தமிழ்நாட்டு மீனவர்கள் காலங்காலமாக மீன்பிடித்து வருவது தங்களது பாரம்பரியமான மீன்பிடி பகுதியில்தான்.
கச்சத்தீவு மீட்பு
இந்திய அரசு சட்டவிரோதமாக கொடுத்திருக்கும் கச்சத்தீவு தங்களுக்கு சொந்தம் எனவும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள் என்றும் சிங்களப் பேரினவாத அரசு கூறிக் கொண்டு மீனவர்களை சித்ரவதை செய்து படகுகளைப் பறிமுதல் செய்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறது.
வாழ்வாதரத்தை முடக்குவதா?
இதுநாள் வரை தமிழக மீனவர்களைப் படுகொலை செய்த சிங்கள காடையர்கள் இப்போது அவர்களை உயிரோடு சாகடிக்கும் வகையில் அவர்களது வாழ்வாதாரத்தையே முடக்கும் வகையில் படகுகளை விடுவிக்கவே முடியாது என்று திமிராக கூறியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
இந்த பிரச்சனையில் இந்திய மத்திய அரசு உடனே தலையிட்டு நிரந்தத் தீர்வு காண வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.
எச்சரிக்கிறேன்
தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணாமல் கொடுங்கோலன் ராஜபக்சே மற்றும் அவனது இந்திய கூட்டாளியான தமிழினத் துரோகி சுப்பிரமணியன் சுவாமி போன்றோரின் ஆலோசனைகளைக் கேட்டு மத்திய அரசு செயல்படுமேயானால் நிச்சயமாக கடுமையான விளைவுகளையே சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்.
இவ்வாறு தி. வேல்முருகன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.