மாபாதக நிர்மலா சீதாராமன்.. மிரட்டும் திண்டுக்கல் சீனிவாசன்.. வேல்முருகன் கடும் பாய்ச்சல்
சென்னை : மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதை கடலோர காவல்படையே ஒப்புக்கொண்ட பிறகும், அப்படி ஒரு செயல் நடக்கவே இல்லை என்று தெரிவித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பண்ருட்டி தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 13-11-2017 அன்று இந்தியக் கடல் எல்லைக்குள்ளேயே மீன்பிடித்துக் கண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இந்திய கடற்காவற்படையே துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் அந்தோணிப்பிச்சை, ஜான்சன் என்று இரண்டு மீனவர்கள் கையில் குண்டடி பட்டுக் காயமுற்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து தமிழகமே ஒருசேரக் குரலெழுப்பியது.
மீனவர்களின் பெருந்தன்மை
ஆனால், துப்பாக்கிச்சூட்டை கடற்காவற்படை மறுக்கவே, மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் அமைதியான முறையில் போராட்டத்தில் உட்கார்ந்தனர். பிறகு கடற்காவற்படை தாங்கள் செய்த தவறை ஒப்புக் கொண்டு, அதற்கு வருத்தம் தெரிவித்து, அது அதிகாரபூர்வமாகவே ஊடகத்திலும் வெளியிடப்பட்டது. இதையடுத்து மீனவர்களும் "இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்" என்றே போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.
விளக்கம் சொல்லும் அமைச்சர்
இவையெல்லாம் நடந்து முடிந்து தங்கள் கடற்தொழிலுக்குச் சாதகமான சூழலை மீனவர்கள் எதிர்நோக்கியிருக்கும் நிலையில், மாபாதகமான ஒரு செயலை, மையம்கொள்ள வைத்திருக்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன். "கடற்காவற்படையினர் ராமேஸ்வரம் மீனவரைச் சுடவில்லை" என்று சொல்லி இருக்கிறார்.
மக்களை மிரட்டும் தலைவர்கள்
மீனவரை மட்டுமல்ல, மக்களையே கொச்சைப்படுத்தும் நிர்மலா சீதாராமனின் இந்த அடாவடிப் பேச்சு தமிழகத்தின் ஏகோபித்த கண்டனத்திற்குள்ளானது. இந்த நிலையில், "கடற்காவற்படையினர் ராமேஸ்வரம் மீனவரைச் சுடவில்லை" என்று நிர்மலா சீதாராமன் சொன்னதில் தவறில்லை என்று அதை நியாயப்படுத்தினார் தமிழக அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன். இதற்கும் ஒருபடி மேலே சென்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், "அமைச்சர்களின் பேச்சை பொறுப்பற்ற முறையில் யாரும் விமர்சிக்கக்கூடாது" என்று மிரட்டலே விடுத்தார்.
பிற்போக்குத்தனமான ஆட்சியாளர்கள்
இதிலிருந்து நமக்குத் தெளிவாகும் உண்மை இதுதான்; அதாவது "நம் அரசமைப்புச் சட்டம் அறிவுறுத்தும் மக்களாட்சி, ஜனநாயகம் என்பதற்குத் தொடர்பே இல்லாத பிற்போக்காளர்களிடம் வஞ்சகமான முறையில் அதிகாரம் அகப்பட்டுக் கொண்டது" என்பதுதான். மக்களை மக்களாகவே கருதத் தயாரில்லாத ஆட்சியாளர்கள், "மீனவரை கடற்காவற்படை சுட்ட" அந்த உண்மையையே படுகொலை செய்வது மட்டுமல்ல; எதை வேண்டுமாலும் செய்வார்கள் என்பதுதான் உண்மை. பாதுகாப்புத்துறையைக் கவனிக்கும் அமைச்சரே இப்படி பொறுப்பற்ற முறையில் மக்களுக்குப் பாதகமாகப் பேசியதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இவ்வாறு பண்ருட்டி தி. வேல்முருகன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.