வெளியேற்றிய அதிமுக: திமுக அல்லது ம.ந.கூட்டணிக்கு போகிறார் வேல்முருகன்!
சென்னை: கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியை அதிமுக வெளியேற்றியுள்ளது. இந்த நிலையில் திமுக அல்லது மக்கள் நலக் கூட்டணியில் இணைவது குறித்து இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செயற்குழு அக்கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு வழங்கியுள்ளது.
அதிமுக கூட்டணியில் வேல்முருகனின் த.வா.கா. 11 தொகுதிகளைக் கேட்டது; ஆனால் அதிமுகவோ 5 தொகுதிகள்தான் தர முடியும் என திட்டவட்டமாக கூறியது.

இருப்பினும் குறைந்தது 7 தொகுதிகளாவது தர வேண்டும் என்பதில் வேல்முருகன் உறுதியாக இருந்தார். இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே திடீரென அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதனால் கடும் அதிர்ச்சியடைந்த வேல்முருகன் இன்று சென்னையில் அவசர செயற்குழுவைக் கூட்டியிருந்தார். இந்த கூட்டத்தில் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேற்றியதைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.
அத்துடன் அடுத்த எந்த கூட்டணிக்கு செல்வது? என்பது குறித்து துண்டுச் சீட்டில் எழுதித் தருமாறு நிர்வாகிகளிடம் வேல்முருகன் கேட்டுக் கொண்டார். பின்னர் இன்றைய செயற்குழுவில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் வேல்முருகனுக்கு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், கூட்டணியில் இருந்து எங்களை அதிமுக வெளியேற்றியுள்ளது; அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை; திமுக மற்றும் மக்கள் நலக் கூட்டணியிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது.
எங்களைப் பொறுத்தவரையில் மதுவிலக்கு அமல், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலை உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளின் கூட்டணியில் இணையத் தயாராக இருக்கிறோம்; விரைவில் இது குறித்து முடிவெடுத்து அறிவிப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications