திருச்செந்தூரில் கோயில் பிரகாரம் இடிக்கும் பணி தொடக்கம்.. வியாபாரிகள் எதிர்ப்பு
திருச்செந்தூர் கோயிலை ஓட்டியுள்ள கடைகளின் முகப்புகளை இடிக்கப்படுவதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரகார மண்டபத்தை இடிக்கும் பணியை தொடங்கியுள்ள அதிகாரிகள் அருகே உள்ள கடைகளின் முகப்புகளை இடிக்க முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள கிரிபிரகார மண்டபத்தின் ஒரு பகுதி கடந்த 14-ந்தேதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் திருச்செந்தூரை சேர்ந்த பேச்சியம்மாள் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பக்தர்கள் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து இடிந்து விழுந்த கிரிபிரகார மண்டபத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பழுதடைந்த கிரிபிரகார மண்டபம் முழுவதையும் இடித்துவிட்டு புதிய மண்டபம் கட்டப்படும் என்றார். இதையடுத்து கிரிபிரகார மண்டபத்தை இடிக்கும் பணி இன்று தொடங்கியது. மண்டபத்தை இடிக்கும் பணி அதிகாலை 5.30 மணிக்கு கோவில் கலையரங்கம் முன்பிருந்து தொடங்கப்பட்டது.
பிரகார மண்டபத்தின் உயரம் சுமார் 25 அடி உள்ளதால் பெங்களூருவில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் கிரிபிரகார மண்டபம் இடிக்கப்பட்டது. இந்த பணியில் அறநிலையத்துறை பொறியாளர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் போது பிரகாரத்திற்கு அருகே உள்ள கடைகளின் முகப்புகளை இடிக்க அதிகாரிகள் முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி வியாபாரிகள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் இடிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்ற தடை விதிக்க கோரி திருச்செந்தூர் முருகன் கோவில் வளாக வியாபாரிகள் சங்கம் சார்பாக மதுரை ஐகோர்ட் கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.