கடைசியில் இளங்கோவனும், குஷ்புவும் மட்டும்தான் இருக்கப் போறாங்க.. விஜயதாரணி
சென்னை: காங்கிரஸ் கட்சியில் எல்லோரையும் விரட்டி விட்டு கடைசியில் ஈவிகேஎஸ் இளங்கோவனும், குஷ்புவும் மட்டும்தான் இருப்பார்கள் போல என்று கூறியுள்ளார் விஜயதாரணி.
திராவிடக் கட்சியான திமுகவை நாசப்படுத்திய குஷ்பு இப்போது காங்கிரஸுக்கு வந்துள்ளார். அவர் வந்த பிறகுதான் பல பிரச்சினைகள் உருவானதாகவும் விஜயதாரணி சொல்கிறார்.
இதுதொடர்பாக விஜயதாரணி அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:

தரக்குறைவாக பேசுவார் இளங்கோவன்
நான் மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு இளங்கோவன்தான் காரணம். அவர், என்னை மிகவும் தரக்குறைவாக பேசிவந்தார். என் பொறுப்பை உணர்ந்து பொறுமையோடு பணியாற்றினேன். ஆனாலும், தொடர்ந்து என்னைச் சீண்டினார்.

நாய் என்றார்
என்னை குரைக்கிற நாய் என்றார். என் வாயால் சொல்ல முடியாத வார்த்தைகளால் அர்ச்சித்தார். என்னை இழிவாகப் பேசினார். எம்.எல்.ஏ. என்றால் பெரிய....? என்று கட்சிக் கூட்டத்திலேயே சொன்னார்.

நொந்து போயிருந்தேன்
என் தாயார் ஒரு மருத்துவர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற குடும்பத்தில் இருந்து வந்தவள் நான். இளங்கோவன் பேச்சால் மனம்நொந்து இருந்தேன். பாதிக்கப்பட்ட எனக்கு ஆதரவாக இல்லாமல், இளங்கோவனின் பேச்சைக் கேட்டு என்னை நீக்கி இருக்கிறார்கள்.

ஆளே இல்லாத கட்சி
ஆளே இல்லாத கட்சியில் இருந்து கொண்டு இளங்கோவன் ஆட்டம் போடுகிறார். கீழ்மட்டத்தில் மிகவும் மோசமான நிலையை நோக்கி காங்கிரஸ் கட்சி சென்று கொண்டிருக்கிறது. ஆனால், வெறுமனே உறுப்பினர் சேர்த்தோம், கமிட்டி அமைத்தோம் என்று வாய்ச்சவடால் மூலம் தலைமையை ஏமாற்றி வருகிறார்.

பயந்து விட்டார்
என்னை மகிளா காங்கிரஸ் தலைவராக்கியதும் பூத் கமிட்டி அமைத்தது, உறுப்பினர்களை சந்தித்தது என பல வேலைகளைச் செய்தோம். அதை எல்லாம் பார்த்து எங்கே தன்னை மீறிச் செல்வாக்குப் பெற்று விடுவேனோ என்கிற பயத்தில் என்னைப் பற்றி தவறான புகார் அளித்து இந்த நிலைக்கு ஆளாக்கி இருக்கிறார்.

குழி தோண்டிப் புதைத்த குஷ்பு
ஏற்கெனவே ஒரு திராவிடக் கட்சியை குழிதோண்டி புதைத்துவிட்டு வந்தவர்தான் குஷ்பு. கட்சிக்குள் சண்டையை ஏற்படுத்தி, தற்போது பாரம்பரியமான காங்கிரசையும் நாசப்படுத்துவதற்கு வந்திருக்கிறார்.

ஆமை புகுந்தா உருப்படுமா?
ஆமை புகுந்த வீடு எப்படி உருப்படும்? அதுபோலதான் இதுவும். இப்போது இவர்கள் இருவராலும், சத்தியமூர்த்தி பவனுக்கு ஒரு தலைவர்கூட வருவதில்லை. இவர் வந்துதான் எல்லோரையும் விரட்டிவிட்டார்.

இவங்க மட்டும்தான் இருப்பாங்க
எல்லா மேடைகளிலும் இவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். கடைசியில், எல்லோரையும் நீக்கிவிட்டு இவர்கள் இருவர் மட்டும்தான் கட்சியில் இருப்பார்கள் போல என்று கூறியுள்ளார் விஜயதாரணி.












Click it and Unblock the Notifications