ராமதாஸ் மிரட்டலுக்கு ரஜினி பின்வாங்கினார்... நான் தைரியமாக எதிர்த்தேன்: விஜயகாந்த்
சென்னை: பாமக தலைவர் ராமதாஸ் மிரட்டலுக்கு பயந்து நடிகர் ரஜினிகாந்த் பின்வாங்கியதைப் போல், நான் ஒருபோதும் பின் வாங்க மாட்டேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
அன்பாக கேட்டாலும், அடித்துக் கேட்டாலும் நான் உண்மையைத்தான் சொல்வேன் என்று கூறியுள்ள விஜயகாந்த், இந்த தேர்தலில் ஜெயலலிதாவின் முரட்டு பணத்திற்கும், தேமுதிக தொண்டர்களின் முரட்டு மனதுக்கும் இடையேதான் போட்டி என்றும் தெரிவித்துள்ளார்.
திருத்தணி தொகுதி தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து திருத்தணி ரயில் நிலையம் அருகே நேற்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், நாங்கள் 6 கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளோம். நாங்கள் வெல்வது நிச்சயம். நான் பகலில் கூட்டம் நடத்தி வெயில் கொடுமையில் யாரையும் சாக விடமாட்டேன். அதனால்தான் மாலை நேரத்தில் கூட்டம் போடுகிறோம் என்றார். அதிமுகவினர் காசு கொடுத்து கூட்டத்துக்கு ஆட்களை அழைத்து வருகின்றனர்.
நாங்கள் யாரையும் காசு கொடுத்து அழைத்து வரவில்லை. இது தானாக வந்த கூட்டம். அதிமுகவினருக்கு ஜெயலலிதாவை குளிர்விக்க வேண்டும். திமுகவினருக்கு கருணாநிதியையும், ஸ்டாலினையும் குளிர்விக்க வேண்டும். அவர்களுக்கு மக்களைப்பற்றி கவலை இல்லை என்றும் கூறினார்..

முடியட்டும் விடியட்டும்
திமுகவினர் முடியட்டும், விடியட்டும் என கூறி பிரச்சாரம் செய்து வருகின்றனர். அது அவர்களுக்கே தீங்காக முடியப் போகிறது. அண்ணாசாலையில் இருந்த சிலையை ஏன் அகற்றினார்கள்?

கருணாநிதி மஞ்சள் துண்டு
கருணாநிதி ஏன் மஞ்சள் துண்டு போட்டுள்ளார்? கேட்டால் எனக்கு சடங்கு, சம்பிரதாயம் மீது நம்பிக்கை இல்லை என்பார்.
பாட்டாளி மக்கள் கட்சியுடன் நட்பு வைத்திருப்பதால் மஞ்சள் துண்டு அணிந்திருப்பதாக கூறினார். இப்போதுதான் பாமகவுடன் நட்பு இல்லையே மஞ்சள் துண்டை கழற்ற வேண்டியதுதானே.

உண்மையைச் சொல்வேன்
அன்பாக கேட்டாலும், அடித்துக் கேட்டாலும் நான் உண்மையைத்தான் சொல்வேன். இந்த தொகுதியில் போட்டியிடும் கிருஷ்ணமூர்த்திக்கு வாக்களிக்க வேண்டும். அதேபோல் மற்ற தொகுதிகளில் போட்டியிடும் தோழமை கட்சியினர் அனைவருக்கும் மறக்காமல் நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.

வேட்பாளர்கள் அறிமுகம்
இதனைத் தொடர்ந்து சென்னை வில்லிவாக்கம் சட்டசபைத் தொகுதியில் மக்கள் நலக்கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் பாண்டியன், சேப்பாக்கம் தொகுதி வேட்பாளர் அப்துல்லா ஷேக், எழும்பூர் தொகுதி வேட்பாளர் பிரபு ஆகியோரை விஜயகாந்த் அறிமுகப்படுத்தி பேசினார்.

பியூஷ் போன பல்ப்
தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர் தமிழ்நாட்டை குட்டிசுவராக்கிவிட்டார். நான் பெயரளவில் மட்டுமே எதிர்க்கட்சி தலைவராக இருந்தேன். சொல்லப்போனால் பியூஸ் போன பல்ப் மாதிரி இருந்தேன்.நடிகர் ரஜினியை அரசியலுக்கு அழைத்தனர். அவர் வரவில்லை.
அது அவரது குணம். அதனை தப்பாக கூற முடியாது.

ஜெயலலிதாவின் முரட்டு பணம்
ஜெயலலிதாவிடம் முரட்டு பணம் இருக்கிறது. ஆனால் என்னிடம் முரட்டு குணம் கொண்ட மக்கள் மனம் உள்ளது. இந்த சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதாவின் முரட்டு பணத்திற்கும், தேமுதிக தொண்டர்களின் முரட்டு மனதுக்கும் இடையேதான் போட்டி.

ரஜினி பின்வாங்கினார்
ரஜினி நடித்த திரைப்படம் ஒன்றில் சில காட்சிகளை வெட்டி எடுக்கசொல்லி ராமதாஸ் மிரட்டல் விடுத்தார். அப்போது, அதற்கு ரஜினிகாந்த் பணிந்து பின் வாங்கிவிட்டார். ஆனால், அதேபோன்று, பாமக தலைவர் ராமதாஸால் எனக்கு மிரட்டல் வந்தபோது நான் பின்வாங்கவில்லை .
எந்த ஒரு விஷயத்திலும் நான் பின்வாங்கியதில்லை என்றும் விஜயகாந்த் கூறினார்.












Click it and Unblock the Notifications