கூட்டணி தலைவர்கள், சின்னங்கள் பெயரை சரியாக சொல்லிய விஜயகாந்த்! மீசையெடுப்பாரா ஆனந்தராஜ்?
நெல்லை: வள்ளியூர் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் பெயர்கள் மற்றும் சின்னங்களை சரியாக ஞாபகப்படுத்தி கூறி அசத்தினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். எனவே, இதுகுறித்து சவால் விடுத்த அதிமுக பேச்சாளர் ஆனந்தராஜ் மீசையை (வளர்த்தாவது) அகற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் சின்னத்தையும், தலைவர்கள் பெயரையும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சரியாக சொல்லிவிட்டால் தனது ஒருபக்க மீசை எடுத்துக்கொள்வதாக நடிகரும், அதிமுக பேச்சாளருமான ஆனந்தராஜ் சவால் விடுத்தார்.
வேலூர் மாவட்டம் ராணிபேட்டையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டபோதும், இரு நாட்கள் கழித்து, திருவாரூரில் பிரசாரம் செய்தபோதும், அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மரியாதை
இந்த விஷயம் தேமுதிகவினரின் சுயமரியாதையை சீண்டிவிட்டதாக கூறப்படுகிறது. விஜயகாந்த்தின் கவனத்திற்கும் பிரேமலதா இதை கொண்டு சென்றுள்ளார்.
ரெடியான விஜயகாந்த்
ஆனந்தராஜ் பேச்சுக்கு பதிலடி கொடுக்க விஜயகாந்த் முடிவெடுத்தார். எனவே கூட்டணி தலைவர்கள் பெயர்களையும், சின்னங்களையும் மனதுக்குள் வாசித்து பார்த்து ரெடியாகிக்கொண்டார்.
சரியாக சொன்னார்
நேற்று வள்ளியூரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், வைகோ, திருமாவளவன், முத்தரசன், ராமகிருஷ்ணன், வாசன் ஆகியோரின் பெயர்களையும், சின்னங்களையும் அவர் வேண்டுமென்றே மேடையில் பேசிக்காட்டினார்.
கொஞ்சம் தயக்கம்
இதில் வாசன் பெயரை மட்டும் கொஞ்ச நேரம் யோசித்தார். ஆனால் யாருடய உதவியும் இல்லாமல் அதையும் விஜயகாந்த்தே சொல்லிவிட்டார். மேலும், யாருடைய உதவியும் இல்லாமல் அவராகவே நடந்து காரில் சென்று ஏறினார்.
மீசை
ஆனந்தராஜ் சவால் விடுத்த நிலையில் அதை விஜயகாந்த் எப்படியோ நிறைவேற்றிவிட்டார். எனவே, ஆனந்தராஜ் மீசையை எடுப்பாரா என தேமுதிகவினர் கேள்வி எழுப்புகிறார்கள். "ஆனந்தராஜே ஒப்புக்கொண்டபடி அவருக்கு மீசையில்லைதான். ஆனால் அதை வளர்த்தாவது பிறகு எடுத்துவிடுவாரா?" என்று கேட்கிறார் தேமுதிக நிர்வாகி ஒருவர்.