டாஸ்மாக் வேணாம்னு நீங்க சொன்னத கேட்டு எனக்கு ஆனந்த கண்ணீரே வந்துருச்சுப்பா!… விஜயகாந்த்
ஆத்தூர்: டாஸ்மாக் வேணுமா? வேணாமா? இது விஜயகாந்த் கேள்வி... வேண்டாம்.... வேண்டாம்... என்று வாக்காளர்கள் பதில் சொன்ன உடன் சந்தோஷத்தில் சிரித்த விஜயகாந்த், இந்த பதிலைக் கேட்டா எனக்கு கண்ணுல ஆனந்த கண்ணீரே வருதுப்பா என்றார்.
மேலும் கூலிங்கிளாஸை கழற்றிவிட்டு கர்ச்சீப்பால் கண்களைத் துடைத்தும் கொண்டார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிரசார பாணியே தனிதான். ஆக்சன் காட்டுவது... இடத்திற்கு தகுந்த மாதிரி பஞ்ச் அடிப்பது... பேச வந்த விஷயத்தையே மறந்துபோவது, உன் பேர் என்ன என்று வேட்பாளரிடமே கேட்பது, சில சமயம் மைக் ரிப்பேர் ஆனால் கடுப்பாகி கத்துவது, அம்மாவுக்கு அமைச்சர்கள் இப்படித்தான்யா கும்பிடு போடுறாங்க என்று உடலை 90 டிகிரி வரை வளைத்து கும்பிட்டுக் காட்டுவது, இடையிடையே தொண்டை பிரச்சனை, வயித்துப் பிரச்சனை, கூட்டணிப் பிரச்சனை என்று ஓடிக் கொண்டிருக்கிறார்...
அவரது பிரசாரத்தில் இடம்பெறும் முக்கிய அம்சம் டாஸ்மாக்... அம்மா குடிநீர், அம்மா உணவகம்தான் போகும் இடமெங்கும் இதைப்பற்றி பேச தவறுவதில்லை.
சட்டம் ஒழுங்கு சரியில்லை
தேமுதிக மக்களை என்றும் ஏமாற்றது. மக்கள் வளர்ச்சியே மிகவும் முக்கியம் என்று கூறும் விஜயகாந்த், தமிழக மக்களுக்காக நான் எந்த முடிவையும் எடுப்பேன். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியில்லை. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை வழிப்பறி, செயின் பறிப்பு நடக்கிறது.
அம்மா டாஸ்மாக்
அம்மா உணவகம், அம்மா பார்மஸி, அம்மா குடிநீர்... இப்படி எல்லாவற்றுக்கும் அம்மா பெயர் வைக்கிறார்கள். மக்களைப் பாழ்படுத்தும் டாஸ்மாக் கடைகளுக்கு அம்மா மதுக்கடை என்று பெயர் வையுங்களேன் என்றும் ஐடியா தருகிறார்.
குஜராத்தில் இல்லையே
நரேந்திர மோடி என்ன குஜராத்தில் கடையைத் திறந்து வைத்திருக்கிறார்களா? நான் ஷூட்டிங்குக்காக குஜராத் சென்றபோது, அகமதாபாத்தில் நேரில் பார்த்தேன். ஒரு மதுக்கடை கூட இல்லை. அதுதான் மோடி ஆட்சி. அந்த நல்ல ஆட்சி, இந்தியா முழுவதும் வேண்டும். அதற்கு மோடி பிரதமராக வேண்டும் என்கிறார்.
டாஸ்மாக் வேணுமா?
சேலம் ஆத்தூரில் நடைபெற்ற பிரசாரத்தின் போது டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது. விவசாய வளர்ச்சிக்கு ஏன் நிர்ணயம் செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய விஜயகாந்த், மக்களே தமிழ்நாட்டில் டாஸ்மாக் வேணுமா? வேணாமா? என்று கேட்டார்.
கண்ணீரை துடைத்த விஜயகாந்த்
அதற்கு வாக்காளர்கள் வேண்டாம்... வேண்டாம்... என்று கூறவே சிரித்துக் கொண்டே கூலிங் கிளாஸை கழற்றிவிட்டு, உண்மையாவா.. என்றார்.
ஆனந்த கண்ணீருப்பா..
ஆமாம் என வாக்காளர்கள் மீண்டும் சொல்லவே, நீங்க எல்லாம் டாஸ்மாக் வேணாம்னு சொன்னதுல எனக்கு சிரிப்பு வந்துருச்சு... அதுல ஆனந்த கண்ணீர் வந்துருச்சு... என்றார்.
மேலும் கர்சீப்பால் கண்களைத் துடைத்துக் கொள்வது மாதிரி நடித்தும் காட்டினார்.