சட்டசபை தேர்தல் கூட்டணி ஆலோசனை: 20 எம்.எல்.ஏக்களுடன் விஜயகாந்த் ஷீரடி பயணம்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினர், 20 எம்.எல்.ஏக்கள் சகிதமாக ஷீரடி சாய்பாபா கோவிலுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார். 2016 சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி மும்பையில் தனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் ரகசிய ஆலோசனை நடத்துவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவுக்கு பின்னர் மன அமைதிக்காக யோகா பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆன்மீகத்திலும் தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார். சாய்பாபா பக்தரான விஜயகாந்த் கடந்த ஜூலை மாதம் ஷீரடிக்கு சென்று சாய்பாபாவை தரிசனம் செய்த வந்தார். இந்நிலையில், தனது கட்சி எம்எல்ஏக்களுடன் மராட்டிய மாநிலம் ஷீரடியில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக தேமுதிக எம்எல்ஏக்கள் 20 பேரையும் கோயம்பேடு கட்சி அலுவலகத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து, தேமுதிக எம்எல்ஏக்கள் சனிக்கிழமை சென்னை வந்தனர். விஜயகாந்த் தலைமையில் எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னையில் இருந்து விமானம் மூலம் ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு செல்ல இருந்தனர்.
ஆனால், நேற்று காலையில் தமிழன் என்று சொல் படத்திற்கான பூஜை நடைபெற்றது. இதில் விஜயகாந்த், அவரது மகன் சண்முகப்பாண்டியன் உள்ளிட்டோரும் அவரது குடும்பத்தினரும் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து பிற்பகல் 1.40 மணியளவில் திடீரென விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மைத்துனரும் இளைஞர் அணி செயலாளருமான எல்.கே.சுதீஷ் மற்றும் விஜயகாந்தின் 2 மகன்கள் மகராஷ்டிரா மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றனர். உறவினர் ஒருவரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக அவர் முன்கூட்டியே செல்வதாக கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தேமுதிக எம்எல்ஏக்கள் 20 பேர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை சென்றனர். அங்கிருந்து ஷீரடி செல்லும் அவர்கள் விஜயகாந்துடன் இணைந்து சாய்பாபாவுக்கு நடைபெறும் பூஜையில் கலந்து கொள்கின்றனர். இன்று இரவே அவர்கள் சென்னை திரும்புகின்றனர். தேர்தல் நெருங்கும் வேளையில் விஜயகாந்த் ஷீரடிக்கு சென்று சாமி தரிசனம் செய்வது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையில் தனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் விஜயகாந்த் சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி பற்றி ஆலோசனை மேற்கொள்வார் என்றும் தேமுதிக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.