தி.மு.க- அ.தி.மு.க.வுக்கு மாற்றுசக்தியாக விஜயகாந்தை மக்கள் இப்போது நினைக்கவில்லை: 'திருமா' பொளேர்
சென்னை: தி.மு.க, அ.தி.மு.க.வுக்கு மாற்றுசக்தியாக விஜயகாந்தை மக்கள் இப்போது நினைக்கவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வைகோ தலைமையிலான மக்கள் நலன் கூட்டணிக்கு வருமாறு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு அக்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றனர். இக்கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில், விஜயகாந்தை ஒரு மாற்று சக்தியாக மக்கள் நினைத்தார்கள். ஆனால் அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைத்து அந்த நம்பகத்தன்மையை இழந்துவிட்டார் என விமர்சித்துள்ளார்.
விஜயகாந்தின் வரலாற்று பிழை
ஆனந்தவிகடனுக்கு அளித்த பே ட்டியில் விஜயகாந்த் குறித்து திருமாவளவன் தெரிவித்த கருத்துகள்:
கேள்வி: அ.தி.மு.க-வை வீழ்த்த எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார் என்கிறார் விஜயகாந்த். உங்கள் அணிக்கு அவர் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?'
திருமாவளவன்: அவர் பேசும் பேச்சுக்கள், அறிக்கைகளை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது. பா.ம.க-வும் ம.தி.மு.க-வும் தங்களுக்கு காலம் வழங்கிய வாய்ப்பை எப்படி நழுவவிட்டார்களோ, அதைப்போலவே 'திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக விஜயகாந்த் வருவார்' என்ற மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற விஜயகாந்தும் தவறிவிட்டார். அவர் செய்த மிகப் பெரிய வரலாற்றுப் பிழை, அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேர்ந்தது.
மக்கள் எதிர்பார்ப்பின் வீரியம் குறைந்தது
இது பத்தோடு பதினொன்று என்பதுபோல் ஆகிவிட்டது. விஜயகாந்த் குறித்த மக்கள் எதிர்பார்ப்பின் வீரியம் குறைந்துபோனதாகத்தான் நினைக்கிறேன். தனது பத்து ஆண்டுகால அரசியலில், தன் மீதான நம்பிக்கையை அவர் நிலைநாட்டவில்லை. இந்தத் தேர்தலிலும் தி.மு.க., அ.தி.மு.க-வோடு அவர் கூட்டணி வைத்தால், தே.மு.தி.க-வின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்பது மட்டும் உறுதி.'
விஜயகாந்த் செல்வாக்கு சரிவா?
கேள்வி: விஜயகாந்த் செல்வாக்கு சரிந்துவிட்டது என்கிறீர்களா?'
அப்படிச் சொல்லவில்லை. இமேஜ் என்பது வேறு; செல்வாக்கு என்பது வேறு. வாக்கு வங்கியை வைத்து மட்டும் இதை மதிப்பிட முடியாது.
தேர்தல் அரசியலில் தொண்டர்களும், வாக்களிக்கும் பொதுமக்களும் வேறு, வேறானவர்கள். விடுதலைச் சிறுத்தைகள் 10 தொகுதிகளில்தான் போட்டியிடுகிறது என்றால், மற்ற தொகுதிகளில் எங்களுக்கு வாக்கு வங்கி இல்லை என அர்த்தமா? 234 தொகுதிகளில் சராசரியாக 5,000 ஓட்டு என்றாலும் அது எங்கள் கணக்கில் வராது.
விஜயகாந்த் மாற்று சக்தி இல்லை
ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு இமேஜ் இருக்கிறது. விஜயகாந்த் ஒரு மாற்று சக்தி என மக்கள் நினைத்தார்கள். இப்போது மக்கள் அப்படி நினைக்கவில்லை. அவர் மக்கள் நலக் கூட்டணிக்கு வந்தால், அத்தகைய ஒரு மாற்று சக்தியாக இந்தக் கூட்டணி இருக்கும்; தமிழ்நாடு அரசியலில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும்.''
முதல்வர் வேட்பாளரா?
கேள்வி: அப்படியே விஜயகாந்த் வந்தாலும் அவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பீர்களா?''
பதில்: அது, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சேர்ந்து எடுக்கவேண்டிய முடிவு.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.