சேலத்தில் நாக்கை துருத்தி பத்திரிகையாளர்களை மிரட்டிய விஜயகாந்த்- பாதுகாவலருக்கும் செம அடி!!
சேலம்: சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக சேலம் சென்ற விஜயகாந்த், தனது பாதுகாவலரை திடிரென அடிக்க கை ஓங்கியதோடு கோபத்தோடு தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேமுதிக வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டம் சேலம் ஐந்து ரோட்டில் அமைந்துள்ள கே.எம்.பி. திருமண மஹாலில் கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் சட்டசபைத் தேர்தல் குறித்தும், வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தேர்தல் சமயத்தில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக சேலம் சென்ற விஜயகாந்த் படிகளில் ஏறி கூட்டம் நடைபெறும் இடத்திற்குச் சென்றார். அப்போது கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் பலரும் வருங்கால முதலமைச்சர் வாழ்க என்று முழக்கமிட்டனர்.
விஜயகாந்த் மாடிப்படியில் ஏறிக் கொண்டிருந்த போது, அவரது பின்னால் சென்று கொண்டிருந்த பாதுகாவலர் ஒருவரை கோபத்தோடு தள்ளினார் இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விஜயகாந்த் தனது கட்சி வேட்பாளர்களை, தொண்டர்களை அடிப்பது அவ்வப்போது நடப்பதுதான். அவரிடம் அடி வாங்குவது பரிசு வாங்குவது போல என்று அவரது தொண்டர்கள் கூறி வருகின்றனர். கடந்த தேர்தலில் வேட்பாளரின் தலையில் குட்டினார். அவ்வப்போது நாக்கை துருத்தி அடித்து சர்ச்சையை கிளப்புவார். செய்தியாளர்களை தூ என்று துப்பியும், தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க என்று கூறியும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார் விஜயகாந்த்.
சேலத்தில் இன்று பாதுகாவலரை கோபத்தோடு தள்ளி சர்ச்சையை ஏற்படுத்தினார். அதன் பின்னர் விஜயகாந்தை விட்டு சில அடி தூரம் தள்ளியே நடந்தார் அந்த பாதுகாவலர்.