விஜயகாந்த் ஆக்சனும்... அரசியல் தலைவர்களின் ரியாக்சனும்...
சென்னை: என் தொண்டர்களை நான் அடகு வைக்க மாட்டேன் என்று காஞ்சி மாநாட்டில் பேசிய விஜயகாந்த், நான் 'கிங்' ஆக இருக்கவே விரும்புகிறேன் என்று கூறினார். அந்த 'கிங்' பேச்சுக்கு பல அரசியல் தலைவர்கள் பலவித கருத்துக்களை தெரிவித்தனர்.
அதற்கெல்லாம் பதில் சொல்லாத விஜயகாந்த் நேற்று மகளிரணி மாநாட்டில் சஸ்பென்ஸை உடைத்திருக்கிறார். திமுகவுல கூப்டாக... பாஜகவில கூப்டாக... மக்கள் நலக்கூட்டணியில கூட கூப்டாக... கூப்ட எல்லோருக்கும் நன்றி. நான் எங்கையும் யார் கூடவும் கூட்டணிக்கு போகல... தனிச்சுதான் நிற்கப்போறேன் என் பின்னாடி வர்றவங்க வரலாம் என்று அதிரடியாக அறிவித்து சிலருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளார்.
2006ம் ஆண்டில் தனித்து களமிறங்கிய விஜயகாந்த், அதிமுக, பாஜக என்று கூட்டணி மாறினாலும் சரியாக 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு சட்டசபை தேர்தலில் தனியாக களம் காண்கிறார்.
கடந்த லோக்சபா தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று தேர்தலை சந்தித்தது விஜயகாந்த்தின் தேமுதிக. தமிழக சட்டசபைத் தேர்தலிலும் விஜயகாந்த்தை கூட்டணிக்கு இழுத்துவிடலாம் என்ற எண்ணத்தில் பாஜக இருந்தது. தற்போது, தனித்துப் போட்டியிட போவதாக விஜயகாந்த் அறிவித்துள்ளது பாஜகவிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூற வேண்டும்.
ஆனாலும் திமுக அல்லது மக்கள் நலக்கூட்டணி உடன் சேராமல் தனித்துப் போட்டி என்று அறிவித்தது பாஜகவிற்கு சற்றே ஆறுதலை அளித்துள்ளது. மக்கள் நலக்கூட்டணி தலைவர்களும் இதேபோல ஆறுதல் பட்டுக்கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

தமிழிசை வரவேற்பு
தனித்து போட்டியிடுவோம் என்று கூறுவது அவர்களின் விருப்பம். அதே சமயத்தில் ஒரு விதத்தில் வரவேற்கத்தக்கது. ஏனென்றால் தேமுதிகவினர் ஊழல் கட்சிகளின் சாயல் இல்லாமல் நிற்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பாஜக கூட்டணியில் இணைந்திருந்தால் மகிழ்ந்து இருப்போம். தி.மு.க. கூட்டணியில் இணைவார்கள் என்ற யூகங்களை முற்றிலுமாக புறந்தள்ளிவிட்டு ஊழல் கூட்டணிகளில் சேராமல் இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

ஸ்டாலின்
தங்களின் கூட்டணிக்கு விஜயகாந்த் வராதது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு சற்றே வருத்தம்தான் ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் கருத்து தெரிவித்தார். தனித்துப் போட்டியிடுவோம் என்ற விஜயகாந்த்தின் அறிவிப்பால் திமுகவுக்கு எந்த ஒரு பின்னடைவும் ஏற்படவில்லை. தேமுதிகவின் உரிமையில் நாங்கள் தலையிடவும் விரும்பவில்லை. கூட்டணிக்கான எங்கள் அழைப்பை ஏற்பதும் நிராகரிப்பதும் தேமுதிகவின் உரிமை என்றார் ஸ்டாலின்.

வைகோ மகிழ்ச்சி
மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ தனது கருத்தில், விஜயகாந்த அறிவிப்பை நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார். விஜயகாந்தின் இந்த முடிவால் ஒரு அரசியல் கட்சியின் கூடாரம் பலத்த அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கும். விஜயகாந்த் பேரம் பேசுகிறார் என்றெல்லாம் அவர் மீது கலங்கம் சுமத்தப்பட்டு நச்சுப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவை அத்தனையும் இப்போது நொறுங்கிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

வதந்திகள் உண்மையாகாது
தேர்தலில் தனித்துப் போட்டி என்று விஜயகாந்த் தனது இறுதி முடிவினை மக்கள் நலன் சார்ந்து தனது இயக்க நலன் சார்ந்து அறிவித்துள்ளார். எந்த இயக்கத்துக்கும் ஓர் அரசியல் முடிவை எடுப்பதற்கு முழு அதிகாரம் உள்ளது. அந்த வகையில் விஜயகாந்த் முடிவெடுத்துள்ளர். மேலும், ஊகங்களும் வதந்திகளும் உண்மையாகாது என்பதை அவரது முடிவு நிரூபித்துள்ளது என்று தமிழ் மாநில கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

முத்தரசன்
திமுக, அதிமுகவுடன் கூட்டணி சேராமல் தனது கொள்கையை விஜயகாந்த் நிலைநாட்டியிருக்கிறார். மக்கள் நலக் கூட்டணியும் ஊழலுக்கு எதிரானதே. எனவே, எதிர்காலத்தில் ஒரே கொள்கையுடைய எங்களுடன் தேமுதிக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

எதிர்பார்த்தே: திருமாவளவன்:
விஜயகாந்தின் இந்த முடிவு எதிர்பார்த்ததுதான். அவரது இந்த அறிவிப்பால் மக்கள் நலக் கூட்டணிக்கு எவ்வித பின்னடைவும் இல்லை. அதிர்ச்சியும் இல்லை. அவரை எதிர்பார்த்துக் கொண்டிருந்த திமுக, பாஜகவுக்கே இம்முடிவு அதிர்ச்சியளிப்பதாக இருக்கும். மக்கள் நலக் கூட்டணிக்கு விஜயகாந்த் அழைப்பு விடுத்தால் அதுகுறித்து பரிசீலிப்போம்" என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மு.க. அழகிரி
விஜயகாந்தின் முடிவு திமுகவுக்கு பெருத்த ஏமாற்றம். திமுகவில் ஸ்டாலின் இருக்கும்வரை அக்கூட்டணியில் தேமுதிக சேராது என்று திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி கூறியுள்ளார்.

அன்புமணி
விஜயகாந்த்தின் அறிவிப்பு குறித்து கருத்து கூறியுள்ள பாமகவின் அன்புமணி "தேமுதிக இதற்குமுன் பலமுறை மக்களுடன்தான் கூட்டணி; வேறு யாருடனும் கிடையாது என்று கூறியது. ஆனால் பின்னர் கூட்டணி வைத்தனர். தனித்து போட்டியிடுவதாக தற்போது கூறிய இந்த முடிவில் அவர் உறுதியாக இருப்பாரா என்பதுதான் எனது கேள்வி என்று கூறியுள்ளார்.

குஷ்பு
விஜயகாந்த் முடிவால் திமுக தலைமையிலான காங்கிரஸ் கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

வாக்கு வங்கி இருக்கா?
எல்லோரும் விஜயகாந்த், விஜயகாந்த் என்று சொல்கிறார்கள். அவருக்கு மொத்தமே 4 சதவிகித வாக்குதான் இருக்கு. அவர் தனித்து போட்டி போட்டு ஜெயிச்சு ஆட்சியை பிடிக்க முடியுமா என்று கேட்கிறார் நடிகையும் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளருமான சி.ஆர். சரஸ்வதி.

மகிழ்ச்சியும் அதிர்ச்சியும்
எது எப்படியோ இதுநாள்வரை மவுனமாக இருந்த விஜயகாந்த், தனித்து போட்டி என்று அறிவித்து அரசியல் களத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கி விட்டார். அவரது தலைமையை ஏற்று யார் யார் இணையப்போகிறார்களோ? அதிமுக தலைமையின் ரியாக்சன் என்னவோ? இன்னும் சில தினங்களில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications