5 ஆண்டு தூங்கிய விஜயகாந்த்.. தேர்தல் வந்ததும் விழித்து விட்டார்: அன்புமணி கிண்டல்
கடலூர்: பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக செயல்படாமல் தூங்கிக் கொண்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், தற்போது தேர்தல் என்றதும் விழித்துக் கொண்டதாக பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்ட பாமக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. பாமக முதல்வர் வேட்பாளரான அன்புமணி இதில் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார்.
அப்போது விழா மேடையில் அவர் பேசியதாவது:-
புரியாத புதிர்...
விஜயகாந்த் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவராக செயல்படாதவர். ஐந்து ஆண்டுகளில் ஒரு முறை மட்டுமே சட்டசபை சென்றவர். ஐந்து ஆண்டுகளாக தூங்கிவிட்டு தற்போது தேர்தல் வந்துவிட்டது என்று விழித்துக் கொண்டார் விஜயகாந்த். அவர் என்ன செய்கிறார் என யாருக்கும் தெரியவில்லை, ஏன் அவருக்கே தெரியவில்லை. பத்திரிகையாளர்களுக்கு மட்டும் அவர் பேசுவது புரிவது ஆச்சர்யமளிக்கிறது.
முதல்வரல்ல... முதல் ஊழியன்
தமிழ்நாட்டில் பாமக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே 650 மதுக்கடைகளை ஒழித்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நான் முதலமைச்சர் இல்லை உங்களின் முதல் ஊழியன். தமிழக மக்கள் சகிப்புத் தன்மை மிக்கவர்கள். ஐம்பது ஆண்டுகள் சகித்து விட்டனர். புரட்சி தலைவர், புரட்சி தலைவி, புரட்சி கலைஞர் இவர்கள் எல்லாம் என்ன புரட்சி செய்தார்கள்.
பொய் லலிதா...
அடுத்ததாக, முதலமைச்சர் ஜெயலலிதா இவருக்கு ஜெயலலிதா என பெயர் வைத்ததை விட பொய் லலிதா என்று பெயர் வைத்து இருக்கலாம். புரட்சி தலைவி செய்த புரட்சி சாராயப் புரட்சி மட்டும்தான். ஒரு லட்சத்து ஒரு ஆயிரம் கோடியாக இருந்த கடனை 2 லட்சத்து 48 ஆயிரம் கோடியாக மாற்றியவர்தான் இவர். பொருளாதார வளர்ச்சியில் கடைசி மாநிலம் தமிழ்நாடு. அதிகம் ஊழல் செய்கிற மாநிலம் தமிழ்நாடு என நந்தன் நிலகேனி அறிக்கை கூறுகிறது.
ஹெலிகாப்டரில் ஓட்டுப்பிச்சை...
கடலூர் மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்பின் போது ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்களும் உயிர்சேதமும் ஏற்பட்டது. அப்போதெல்லாம் வர முடியாத ஜெயலலிதாவால் ஹெலிகாப்டரில் வந்து ஓட்டு பிச்சை கேட்கிறார். ஆர்.கே.நகர் வேட்புமனு தாக்கலின்போது நிதியமைச்சர் ஓபிஎஸ், நத்தம் ஆகியோர் ஜெயலலிதா காரில் முன்பு விழுந்து கும்பிடுகின்றனர். மக்களை சந்திக்காத முதல்வர் ஓட்டு மட்டும் கேட்டு வந்துவிடுகிறார்.
ஐ.நா.வில் பேசியவன்...
நான் அப்படியில்லை எனக்கு பதவி ஆசை இல்லை. 35 வயதில் பதவிகள் பார்த்தவன். என்னை முதலமைச்சராக்குங்கள். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். 60 நாடுகள் சுற்றியவன், ஐ.நா சபையில் பேசியவன்.
அழுது கொண்டே பதவியேற்பு...
சினிமாவில் நடிப்பவர்களுக்கு கோயில் கட்டும் ஊர் தமிழ்நாடு. வருவாயில் மூன்றில் ஒரு பங்கு சாராயத்தில் இருந்து வருவது தமிழ்நாடு. முதலமைச்சர், அமைச்சர்கள் அழுது கொண்டே பதவி ஏற்றது தமிழ்நாட்டில்தான்.
திமுக தேர்தல் அறிக்கை...
திமுகவின் கதாநாயகனே தேர்தல் அறிக்கைதான் என்கிறார் ஸ்டாலின். எங்கள் தேர்தல் அறிக்கையில் 60% காப்பியே திமுக தேர்தல் அறிக்கை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நான்கு வேளாண் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்படும். நான்கு வேளாண் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும். மாவட்டம் தோறும் வேளாண் கல்லூரிகள் அமைக்கப்படும்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.