விநாயகர் சிலை அகற்றம் எதிரொலி: சுடுகாட்டில் குறியேறிய மக்கள்
நெல்லை: நெல்லையில் விநாயகர் சிலையை போலீசார் அகற்றியதால் பொதுமக்கள் அருகில் உள்ள சுடுகாட்டில் குடியேறினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த இட்டமொழி அருகே புதூரில் கால்நடைக்கு சொந்தமான மேய்ச்சல் புறம்போக்கு நிலம் இருந்தது. இங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஒன்றரை அடி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு அப்பகுதி மக்களால் வழிபாடு நடத்தப்பட்டு வந்தது.

இதற்கு அதே ஊரில் உள்ள மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு பிரிவினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் வருவாய் துறை, கால்நடை துறை அதிகாரிகள் முன்னிலையில் விநாயகர் சிலை அகற்றப்பட்டது. அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் அதே இடத்தில் விநாயகர் சிலையை வைக்க வலியுறுத்தி ஊர் தலைவர் லிங்கம் தலைமையில் ஊரின் கிழக்கு பகுதியில் உள்ள சுடுகாட்டில் மக்கள் குடியேறினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வள்ளியூர் டிஎஸ்பி பாலாஜி அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதை ஏற்க மறுத்த பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட 35 பேரையும் போலீசார் கைது செய்து திசையன்விளையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications