திருடர்களுக்கு உதவிய 27 பேர்- வளைத்துப் பிடித்து போலீசில் ஒப்படைத்த கிராம மக்கள்
மேலூர்: மதுரை மாவட்டம், கீழவளவு கிராமத்தில் திருடர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட 27க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த கீழவளவு கிராமத்தைச் சேர்ந்த திருடர்கள் சிலர் மற்றொரு கிராமமான சாணிப்பட்டிக்குள் சென்று திருடி விட்டு வந்துள்ளனர்.
அப்போது இதனைக் கண்ட சாணிப்பட்டி கிராம மக்கள் திருடர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். தப்பிப் பிழைத்த திருடர்கள் கீழவளவில் சென்று முறையிட்டுள்ளனர்.
இதனையடுத்து திருடர்களுக்கு ஆதரவாக கீழவளவு கிராமத்தைச் சேர்ந்த 30 பேர் 15 பைக்குகளில் வந்து சாணிப்பட்டி கிராம மக்களை கடுமையாக தாக்கி உள்ளனர். திருடர்களுக்கு ஆதரவாக வந்து தாக்குதலில் ஈடுபட்டவர்களில் 27 பேரை கிராம மக்கள் சுற்றி வளைத்து பிடித்ததுடன் போலீசிலும் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.