பெரியகுளம் அருகே ஓபிஎஸ் கிணறு முற்றுகை: பெண்கள் உட்பட 250 பேர் கைதால் பதற்றம்!
முன்னாள் முதல்வர் ஓபிஎஸின் கிணறை முற்றுகையிட்ட 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி: முன்னாள் முதல்வர் ஓபிஎஸின் கிணறை முற்றுகையிட முயன்ற பெண்கள் உட்பட 250 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். போராட்டம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தேனி பெரியகுளம் அருகே ஓபிஎஸ் தோட்டத்தில் தோண்டப்பட்டுள்ள 200 அடி ஆழ கிணறுகளால் அப்பகுதியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனைக் கண்டித்து கிராம மக்கள் இன்று காலை முதல் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்
பொதுமக்களுடன் தள்ளுமுள்ளு
இந்நிலையில் திடீரென கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் ஓபிஎஸின் கிணறை முற்றுகையிட முயன்றனர். அப்போது காவல்துறையினர் இதனை தடுக்க முயன்றதால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
வலுக்கட்டாயமாக கைது
இதையடுத்து முற்றுகையிட முயன்ற ஆண்கள் சிலரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று கைது செய்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அதிரடிப்படை குவிப்பு
இந்நிலையில் கிணற்றை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 250 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அங்கு போராட்டம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அங்கு அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
கிணறுகளை ஒப்படைக்க வேண்டும்
ஏற்கனவே ஓபிஎஸ்க்கு சொந்தமான கிணறுகளால் நீராதாரம் பாதிக்கப்பட்டுள்ளமாக கிராமக்கள் குற்றம்சாட்டியிருந்தனர். காலிக் குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்ட அவர்கள் ஓபிஎஸ்க்கு சொந்தமான கிணறுகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.