மின்துறை அமைச்சர் 'நத்தம்' போட்டியிட்ட ஆத்தூர் தொகுதியில் இருளில் நடந்த வாக்குப் பதிவு
திண்டுக்கல்: தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் போட்டியிட்ட ஆத்தூர் தொகுதியில் 3 வாக்குச் சாவடிகளில் மின்சாரம் இல்லாமல் எமர்ஜென்சி விளக்குகள் உதவியுடன் இரவு 7 மணி வரை வாக்குப் பதிவு நடந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளராக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி ஆகியோர் போட்டியிட்டனர். இத்தொகுதிக்குட்பட்ட சோலைக்காடு, பன்றிமலை உள்ளிட்ட கிராமங்களுக்கு திசையன்கோட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது.

தேர்தலையொட்டி மின் வினியோகம் தடை இல்லாமல் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில் இப்பகுதியில் கனத்த மழை பெய்தது. இதனால் நேற்று முன்தினம் இரவில் மின் வினியோகம் தடைப்பட்டது.
இருப்பினும் வாக்குப் பதிவையொட்டி மின்சாரம் வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் மின்விநியோகம் வழங்கப்படவில்லை. வேறு வழியில்லாமல் 3 வாக்குச் சாவடிகளில் எமர்ஜென்சி விளக்குகள் உதவியுடன் இரவு 7 மணி வரை வாக்குப் பதிவு நடைபெற்றது.
இந்த வாக்குச் சாவடிகளில் சோலைக்காடு, அழகுமடை, முருக்கடி கிராமங்களின் 2600 வாக்காளர்களில் 2019 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications