கடலில் இயற்கை மாற்றம்.. அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும்.. மீனவர்களுக்கு தமிழக அரசு வார்னிங்!
தென் தமிழக கடலோரப் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என தமிழக வருவாய் நிர்வாக ஆணையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: தென் தமிழக கடலோரப் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக வருவாய் நிர்வாக ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு வீசிய ஓகி புயலால் கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாகினர்.
இதுவரை அவர்கள் கரை திரும்பாததால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஓகி புயல் குறித்து தமிழக அரசு முறையான அறிவிப்பு வெளியிடாததே காரணம் என மீனவர்கள் குற்றம்சாட்டினர்.
இயற்கை சீற்றங்கள்
இதையடுத்து வானிலை நிலவரம், இயற்கை சீற்றங்களான மழை, வெயில், கடல் கொந்தளிப்பு குறித்து தமிழக அரசு முன்னரே அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.
கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்
இந்நிலையில் தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் மீனவர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது தென் தமிழக கடலோரப் பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் இயற்கை மாற்றம்
கடலில் ஏற்படும் இயற்கை மாற்றத்தால் அலையின் சீற்றம் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக 18 முதல் 22 விநாடி இடைவெளியில் 2 முதல் 3.5 மீட்டர் உயரத்திற்கு அலைகள் உயர வாய்ப்பு உள்ளதாகவும் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.
அறிவிப்பு - வேண்டுகோள்
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அரசு அவ்வப்போது வெளியிடும் அறிவிப்புகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இரண்டரை மீட்டர் உயரத்திற்கு கடல் அலையின் சீற்றம் இருக்கும் என்றும் தமிழ வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் எச்சரித்துள்ளார்.