தூத்துக்குடி மாவட்டத்தில் தலை விரித்தாடும் குடிநீர் தட்டுப்பாடு.. காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்
சீவலப்பேரி கூட்டு குடிநீர் வழங்க வேண்டும், பழுதான ஆழ்துளை கிணறு மின் மோட்டார்களை சரி செய்ய வேண்டும் என்று பெண்கள் கோஷங்களை எழுப்பினர்.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் சீரான குடிநீர் வழங்காததால் பெண்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
ஓட்டப்பிடாரம் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக சீவலப்பேரி கூட்டு குடிநீர் சீராக வினியோகம் செய்யப்படவில்லை. ஆழ்துளை கிணறுகளில் மின் மோட்டார் பழுது காரணமாக தேவையான குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் மாலை காலி குடங்களுடன் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு அலுவலக வாயில் முன்பு தரையில் அமர்ந்து சீவலப்பேரி கூட்டு குடிநீர் வழங்க வேண்டும், பழுதான ஆழ்துளை கிணறு மின் மோட்டார்களை சரி செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
ஆனால் அங்கு வட்டார வளர்ச்சி அதிகாரி இல்லாததால் பொறியாளர் மாரியப்பன் பொது மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து அப்பகுதி பெண்கள் கலைந்து சென்றனர்.
இதுபோல் புதுக்கோட்டை பகுதியிலும் பல இடங்களில் குடிநீர் வினியோகம் சரியாக இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பொது மக்களும் யூனி்யன் அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இன்னும் சில நாட்களில் புதிய போர்வெல் போடப்படும் என அவர் தெரிவித்தார்.