திமுக உடன் கூட்டணிக்குத் தயார்... ஆனா ஆட்சியில பங்கு தரணும்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அதிரடி
மதுரை: தமிழக அரசியலில் திமுக.வுடன் இணைந்து செயல்படும் நிலை ஏற்பட்டால் காங்கிரஸ் அதற்கு ஒத்துழைக்கும் என தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். மக்களுக்காக குரல் கொடுக்கும் கட்சி திமுக.,வும் காங்கிரசும் மட்டும் தான். கூட்டணியில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகர் தெற்கு, வடக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டார்.
கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெருந்தலைவர் காமராஜர் தமிழகத்தில் பொற்கால ஆட்சியை நடத்தினார். அவரது ஆட்சியை மீண்டும் கொண்டுவர காங்கிரசார் பாடுபட்டு வருகிறார்கள் என்றார்.

திருச்சி வரும் ராகுல் காந்தி
காமராஜரின் புகழை பரப்பும் வகையிலும், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வகையிலும் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல்காந்தி வருகிற 23-ந் தேதி திருச்சிக்கு வருகிறார். இதில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

காமராஜர் ஆட்சி
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு வர உள்ளது. காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்து ஆட்சி அமைக்கவே முயற்சி செய்து வருகிறோம். பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் மலரச்செய்யும் கட்சியை வலுப்படுத்தி வருகிறோம்.

திமுக உடன் கூட்டணி
தமிழக அரசியலில் திமுக.,வுடன் இணைந்து செயல்படும் நிலை ஏற்பட்டால் காங்கிரஸ் அதற்கு ஒத்துழைக்கும். தமிழக மக்களுக்காக குரல் கொடுக்கும் கட்சி திமுக.,வும் காங்கிரசும் மட்டும்தான் என்றும் அவர்கூறினார்.

ஆட்சியில் பங்கு
தேர்தல் நேரத்தின்போது தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைப்பது குறித்து கட்சியின் மேலிடம் தான் முடிவு செய்யும். சட்டசபை தேர்தலின்போது ஆட்சியில் பங்கு என்று உறுதி அளிக்கும் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படும். ஆனால் இறுதி முடிவை கட்சி மேலிடம்தான் எடுக்கும் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications