திமுகவிடம் மன்னிப்பு கோரும் நிலையில் காங்கிரஸ் இல்லை: ஞானதேசிகன்
சென்னை: திமுகவிடம் மன்னிப்பு கோரும் நிலையில் காங்கிரஸ் இல்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
செய்த தவறுக்கு மனம் வருந்தினால் காங்கிரசை திமுக ஆதரிக்கும் என கருணாநிதி கூறிய நிலையில், அதற்கு பதிலடி தரும் வகையில் ஞானதேசிகன் இவ்வாறு கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஞானதேசிகன் கூறியதாவது:
தேர்தலுக்கு முன் கூட்டணியைவிட்டு விலகுவதே திமுகவுக்கு வாடிக்கையாகிவிட்டது. காங்கிரஸ் என்ன துரோகம் செய்தது என கருணாநிதி பட்டியலிட்டால் அதற்கு விளக்கம் அளிக்க காங்கிரஸ் தயாராக உள்ளது. எனவே திமுகவிடம் மன்னிப்பு கோரும் நிலையில் காங்கிரஸ் கட்சி இல்லை. தேர்தலுக்கு பிறகு யார் அதலபாதாளத்திற்கு போவார்கள் என்பது தெரியும்" என்றார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, "காங்கிரஸ் கட்சி இன்றைக்கு அதல பாதாளத்திலே விழுந்து கிடக்கிறது என்றால் அதற்கு என்ன காரணம்?
திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தோழர்களையும், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செயல்வீரர்களையும் அவர்கள் படுத்தியபாட்டிற்கு அனுபவிக்கிறார்கள்.
இதே காங்கிரஸ்காரர்கள் நாளைக்கு மனம் வருந்தி நாங்கள் இந்த மதச்சார்பற்ற நிலைக்கு மீண்டும் திரும்புவோம், நாங்கள் மத வெறியர்களை ஆதரிக்க மாட்டோம் என்று முன் வருவார்களேயானால்; அவர்களுக்கு போனால் போகிறது என்று திராவிட முன்னேற்றக் கழகம் அவர்களை ஆதரிக்கும், அவர்களை பொறுத்துக்கொண்டு இதுவரையிலே அவர்கள் செய்த காரியங்களையெல்லாம் எண்ணிப்பாராமல்; அவர்களுக்கு பொது மன்னிப்பு தரும்" என்று கூறியிருந்தார்.
அவரது பேச்சுக்கு பதிலடி தரும் வகையில் ஞானதேசிகன் இவ்வாறு கூறியுள்ளார்.