சரியாவே சொல்லலை, அதான் தோத்துட்டோம்.. சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்!
நெல்லை: மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம், விவசாயக் கடன் தள்ளுபடி, 100 நாள் வேலைத் திட்டம் போன்ற அரசின் சாதனைகளை, திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லாததால்தான் காங்கிரஸ் கட்சி லோக்சபா தேர்தலில் தோல்வியைச் சந்தித்தது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

நெல்லை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் கட்டடங்களுக்கு முறையான அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட வேண்டும். பல இடங்களில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் கட்டடங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகப் புகார் வந்துள்ளது.
லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்ததை காங்கிரஸ் கட்சி முழு மனதோடு ஏற்றுக்கொள்கிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம், விவசாயக் கடன் தள்ளுபடி, 100 நாள் வேலைத் திட்டம் போன்ற அரசின் சாதனைகளை, திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லாததால்தான் காங்கிரஸ் கட்சி தோல்வியைச் சந்தித்தது.
தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் காங்கிரஸ் கட்சி தனித்தன்மையை இழந்து விட்டது. 1967-இல் இழந்த காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டுவர முடியாமல் போனது. 2006-இல் திமுக அமைச்சரவையில் காங்கிரஸ் பங்குபெறாதது தவறு.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைத்தது. இப்போது பாஜக அரசு இந்தியைத் திணிக்க முயன்று வருகிறது. சம்ஸ்கிருத வாரம் கொண்டாடப்படும் என அறிவித்துள்ளது.
ரயில்வே, பாதுகாப்புத் துறையில் அன்னிய முதலீடு கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்துள்ளது. பாதுகாப்புத் துறையில் அன்னிய முதலீட்டை அனுமதித்தால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும்.
தாமிரபரணி ஆற்றில் ரூ.369 கோடியில் கொண்டுவரப்பட்ட வெள்ளநீர்க் கால்வாய்த் திட்டம் முடங்கி இருப்பது குறித்து மக்கள் பிரதிநிதிகள்தான் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை வேண்டும்.
வரும் செப்டம்பர் மாதம் தூத்துக்குடியில் நடைபெறும் பிறந்த தின விழாவில் நடிகர் சிவாஜியின் சிலை திறக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications