எங்களுக்கு 80 எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளிக்கிறார்கள்.. தங்க தமிழ்ச்செல்வன் பரபர பேட்டி
எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக அணி திரண்டுள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் இன்று எண்ணிக்கை 80 ஆக உயரும் என்று எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை விரைவில் 80 ஆக உயரும் என ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி சின்னவீராம்பட்டினம் தனியார் விடுதியில் தங்கி இருந்த டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அங்கு அறைகள் நிரம்பி விட்டதால், 100 அடி சாலையில் உள்ள சன்வே சொகுசு விடுதிக்கு இன்று மாற்றப்பட்டனர்.
டிடிவி தினகரன் தரப்பைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏக்கள் கடந்த 3 நாள்களாக தனியார் விடுதியில் தங்கி இருந்தனர். இந்நிலையில் அந்த விடுதியில் சுற்றுலா பயணிகள் அறைகளை ஆன்லைன் மூலம் முழுவதுமாக முன் பதிவு செய்து விட்டதால், எம்.எல்.ஏக்கள் இடம் மாற முடிவு செய்தனர்.
அதன்படி புதுவை 100 அடி சாலையில் உள்ள சன்வே ஹோட்டலில் 2 நாள்களுக்கு அறைகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று பிற்பகல் 12.45 மணிக்கு எம்.எல்.ஏக்கள் கார்களில் சன்வே ஹோட்டலுக்கு சென்றனர்.
வாரவிடுமுறையால் காலி செய்தோம்
ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ தங்கதமிழ்ச்செல்வன், செந்தில்பாலாஜி, கதிர்காமு உள்பட 18 எம்.எல்.ஏக்கள் வநதனர். பின்னர் செய்தியாளர்களிடம் தங்கதமிழ்ச்செல்வன் பேசுகையில், "நாங்கள் தங்கியிருந்த விடுதியில் வாரவிடுமுறை காரணமாக அறைகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து விட்டதால் நாங்கள் காலி செய்ய நேரிட்டது.
எங்கள் பின்னால் 80 எம்எல்ஏக்கள்
எங்கள் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 80ஐ தாண்டும். பெரும்பான்மையான எம்.எல்.ஏக்கள் எங்களிடம் உள்ளனர் என்பதை விரைவில் நிரூபிப்போம். பலர் மனதளவில் எங்களோடு உள்ளனர். அது விரைவில் வெளிப்படும்" என தெரிவித்தார்.
கட்சியை கைப்பற்றுவதே இலக்கு
செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. கூறுகையில், " புரட்சித் தலைவர் உருவாக்கி, ஜெயலலிதாவால் காப்பாற்றப்பட்ட கட்சியை கைப்பற்றுவதே எங்கள் இலக்கு. தினகரன் வருவதாக உங்களுக்கு கிடைத்த தகவல் தவறு. அவர் வருவதாக இருந்தால் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.
நோட்டீஸ் வரட்டும்
முதலில் சட்டப்பேரவையிலிருந்து எங்களுக்கு நோட்டீஸ் வரட்டும். அது வந்த பின் சட்ட நிபுணர்களுடன் கலந்து பின்னர் உரிய பதில் தெரிவிப்போம்.
தொகுதி மக்களுக்கு தெரியும்
தொகுதியில் என்னைக் காணவில்லை என்பது, எனக்கு வேண்டாதவர்களால் பரப்பப்படும் செய்தி. நான் 2 முறை கரூர் தொகுதியிலும், ஒரு முறை அரவக்குறிச்சி தொகுதியிலும் தேர்வு செய்யப்பட்டேன். தொகுதி மக்களுக்கு என்னைப் பற்றி தெரியும். சட்டப்பேரவையில் வாதாடி, மக்களுக்கு அடிப்படை பணிகளை செய்துள்ளேன்." என்று தெரிவித்தார்.