ஸ்ரீரங்கம்: நம்பிக்கை சற்று குறைவாகத்தான் இருக்கிறது... தமிழிசை
சென்னை: ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத் தேர்தல் நியாயமாக, நேர்மையாக நடந்தால் எதிர்க்கட்சிகள் நிச்சயம் வெற்றி பெறும். ஆனால் நம்பிக்கை சற்று குறைவாகத்தான் இருக்கிறது. அதிலும் இது இடைத் தேர்தல், இடைத் தேர்தலில் ஆளும் கட்சியின் கைகள் ஓங்கித்தான் இருக்கும் என்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நியாயமாக நடந்தால் எதிர்க்கட்சிகளுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும். கட்சித் தலைமையின் கவனம் தற்போது டெல்லி சட்டசபைத் தேர்தலில் இருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் கட்சி தலைமையிடம் பேசிய வேட்பாளர் முடிவு குறித்து அறிவிக்கப்படும்.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று வழக்காடு மன்றம் வரை சென்று சொல்லிவிட்டோம். ஆகையால் நம்பிக்கை சற்று குறைவாகத்தான் இருக்கிறது. அதிலும் இது இடைத்தேர்தல். இடைத்தேர்தலில் ஆளும் கட்சியின் கைகள் ஓங்கித்தான் இருக்கும். தேர்தல் ஆணையம் எந்த அளவுக்கு நடுநிலையோடு நடந்து கொள்கிறதோ, அதைப் பொறுத்துத்தான் கட்சிகள் நம்பிக்கையோடு தேர்தலை சந்திப்பதும், முடிவுகளை எதிர்ப்பார்ப்பதும் இருக்கிறது.
நான் ஏற்கனவே சொன்னதுபோல, நடுநிலையாக தேர்தல் ஆணையம் நடந்துகொண்டால், பாஜகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். தமிழகத்தில் பாஜக மாற்று சக்தியாக உருவெடுத்து வருகிறது.
ஸ்ரீரங்கத்தில் கடந்த முறை அதிமுகவுக்கு வெற்றி கொடுத்திருந்தாலும், இப்போது ஊழல் வழக்கில் தண்டனை அடைந்திருப்பதால், ஊழல் வழக்கினால்தான் தற்போது அந்த தொகுதி இடைத்தேர்தலை சந்திப்பதால், மக்கள் மாற்றி சிந்திப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
உள்ளாட்சி மற்றும் கண்டோன்மென்ட் தேர்தலில் நடந்த அராஜகம் தொடரக்கூடாது. ஸ்ரீரங்கம் தேர்தல் அமைதியாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.
பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சிப்பதை வைகோ நிறுத்த வேண்டும். மோடியை விமர்சிக்கும் வைகோவை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றார் தமிழிசை.