ஆர்.கே.நகருக்கு இடைத்தேர்தல் ஏன் வந்தது என்று மக்களுக்குத் தெரியும்: சி.மகேந்திரன்
சென்னை: கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏக்கள் அனைவரும் அதிமுக ஆட்சியின் திட்டங்களைப் பாராட்டி மட்டுமல்ல தவறுகளையும் சட்டசபையில் சுட்டிக் காட்டிப் பேசியுள்ளனர் என்று ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சி.மகேந்திரன் தெரிவித்துள்ளார். இந்த இடைத்தேர்தல் எதற்கு வந்தது என்று தமிழக மக்களுக்குத் தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா, நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது, இது நீங்கள் விரும்பாத இடைத்தேர்தல், எதிர்கட்சியினர் செய்த சதியால் வந்த இடைத்தேர்தல் என்று கூறினார்.
சட்டசபையில் உள்ள கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் ஆறுமுகம், குணசேகரன், பாலபாரதி ஆகியோர் அதிமுக அரசின் பல சாதனைகளை பாராட்டி பேசினர். அப்படி சட்டசபையில் பாராட்டி பேசிவிட்டு இங்கே எதிர்த்து போட்டியிடுவதால் அதிமுக அரசின் நான்கு ஆண்டு கால ஆட்சியை குறை கூறி பிரச்சாரம் செய்கின்றனர் என்றும் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக தண்டையார்பேட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சி.மகேந்திரன், எதிர்க்கட்சியினர் செய்த சதியால் இடைத்தேர்தல் வந்ததாக ஜெயலலிதா கூறினார். எதற்காக இடைத்தேர்தல் வந்தது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.18 வருடமாக நடந்த சொத்து குவிப்பு வழக்கை மக்கள் மறக்கவில்லை. இதுபற்றி மக்கள் நன்கு அறிவார்கள்.
பாராட்டுவது ஏன்?
கம்யூனிஸ்டு கட்சியை பொறுத்தவரை, மக்களுக்காக நல்ல திட்டங்களை எந்த அரசு செயல்படுத்தினாலும் அதைக் கட்சி பாகுபாடின்றி பாராட்டுவோம். திமுக ஆட்சியிலும் அவர்கள் கொண்டு வந்த நல்ல திட்டங்களைப் பாராட்டிதான் உள்ளோம் என்றார்.
கிரானைட் முறைகேடு
இப்போது ஆற்றுமணல் கொள்ளையை தடுக்க நீதிமன்றம் மூலம் தடையாணை வாங்கினோம். கிரானைட் முறைகேடு வழக்கை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து போராட்டம் நடத்தினோம். மக்களை பாதிக்கக்கூடிய செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களும் நடத்தி இருக்கிறோம்
பொதுப்பணித்துறையில் ஊழல்
போலீசாரின் அத்துமீறல்களை தட்டிக்கேட்டோம். இன்று எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் ஊழல்தான். பொதுப்பணித்துறையில் 45 சதவீத அளவுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது என்று ஒப்பந்ததாரர்களே வெளிப்படையாக அறிவித்தனர்.
சாலைகள் போட்டார்களா?
நாங்கள் அதிமுக ஆட்சியில் நடைபெறும் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டிதான் வருகிறோம். ஆர்.கே.நகர் தொகுதியில் 100 சாலைகள் போடப்பட்டதாக கூறினார்கள். எல்லாமே தேர்தலுக்காக போடப்பட்ட சாலைகள் தான்.
கோடிக்கணக்கில் செலவு
ஆர்.கே.நகரில் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை.
ஒரு வேட்பாளர் ரூ.28 லட்சம் வரைதான் செலவு செய்ய முடியும். அதற்கு மேல் செலவு செய்தால் வெற்றி செல்லாது என்பது தேர்தல் விதியாகும். ஆனால் ஆர்.கே.நகரில் தினசரி கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளனர்.
உயிரோடு இருக்கிறதா?
நேற்று மட்டும் முதல்வர் வந்து சென்ற வகையில் செலவு ரூ.3 லட்சத்து 45 ஆயிரம் என தேர்தல் ஆணையத்தில் கணக்கு காட்டி உள்ளனர். ஆனால் ஜெயலலிதா வந்தபோது எவ்வளவு செலவு செய்திருப்பார்கள் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.
இதையெல்லாம் பார்க்கும்போது தேர்தல் ஆணையம் உயிரோடு இருக்கிறதா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
சுகாதாரமில்லாத பகுதி
ஆர்.கே.நகர் பகுதியில் மிகவும் பின்தங்கிய மக்கள் உள்ளனர். இங்கு அடிப்படை வசதி கிடையாது. குடிநீருக்காக மக்கள் அல்லல்படுகின்றனர். இந்த தொகுதியில் மலை போல் குப்பை உள்ளதால் மக்கள் சுகாதாரமின்றி தவிக்கிறார்கள். இந்த தொகுதியில் முதியோர் உதவி தொகை, விதவை உதவி தொகை பல பேருக்கு வரவில்லை.
ஜனநாயகக் கடமை
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முன்னுரிமை அளிக்கிறது. ஜனநாயக கடமை ஆற்ற எதிர்க்கட்சிகளும், மக்களும் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்" என்று கூறினார்.