'டாஸ்மாக்' இல்லாத ஆட்சியமைப்போம்.. தமிழிசை தடாலடி அறிவிப்பு!
கரூர்: ஊழல், இல்லாத டாஸ்மாக் இல்லாத, அ.தி.மு.க, தி.மு.க இல்லாத கட்சிகளோடு தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
கரூரில் உள்ள கொங்கு திருமண மண்டபத்தில் கரூர் மாவட்ட பா.ஜ.க கட்சியின் ஊழியர் கூட்டம் மாவட்ட தலைவர் சிவசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சொளந்தரராஜன் முன்னதாக செய்தியாளார்களை சந்தித்தார்.
அப்போது அவர், கடந்த 10 மாதங்களில் எந்த வித ஊழல் குற்றச்சாட்டு இல்லாமல் பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். மேலும் பிரதமர் மோடி திறமையான, வலிமையான ஆட்சி நடத்தி வருகிறார். முதலீட்டில் சீனாவை மிஞ்சி இந்தியா முன்னேறி வருகிறது. விரைவில் 10 சதவிகித வளர்ச்சியை எட்டுவோம்.
நிலம் கையகப்படுத்தும் மசோதா விவசாயிகளுக்கு ஆதரவாகவே உள்ளது. தமிழ்நாடு அரசு நிர்வாகம் முடங்கிப் போய் உள்ளது. கரூர் மாவட்டத்தில் கனிம மணல் கொள்ளை அதிகரித்து வருகிறது. மேலும் கரூர் மாவட்டத்தில் பாலியல் கொலைகளும் அதிகரித்து வருகிறது. கரூரில் காவல் துறை ஆய்வாளர் 3 மாதங்களாகியும் நியமிக்கப்படாமல் அரசு, நிர்வாகம் முடங்கியுள்ளது.
பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் அரசு அதிகாரிகளுக்கு எவ்வளவு கமிஷன் தர வேண்டும் என்று தட்டி வைத்து தட்டி கேட்கிற அவல நிலை உள்ளது. பாலை ரோட்டில் கொட்டி பால் உற்பத்தியாளர்கள் ஆர்பாட்டம் செய்கிறார்கள். காற்றாலை மின்சாரம் சேமிக்க முடியாமல் அதிக விலைக்கு வாங்குகிறார்கள். சூர்ய சக்தித் திட்டத்தை மாநில அரசு முழுமையாக பயன்படுத்த வில்லை.
மாநில அரசு எல்லாத்துறைகளிலும் முடங்கியுள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் இதன் காரணமாக படுதோல்வி அடையும். மாற்று சக்தியாக பா.ஜ.க கட்சி வளரும்.
தமிழகத்தில் மீண்டும் மாவோஸ்ட்டிகள் தலை தூக்க விடாமல் காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் அரசு அதிகாரிகளை தட்டி கேட்கிறார்கள். பொதுப்பணித்துறை அதிகாரிகள் தட்டி வைத்து தட்டி கேட்கிறார்கள் என்றார் அவர்.