கர்நாடகா: சிப்பி சேகரிக்க ஆற்றில் இறங்கியபோது நேர்ந்த துயரம்! பறிபோன 8 உயிர்கள்! பிரதமர் இரங்கல்!
பெங்களூர்: கர்நாடகாவில் சிப்பி சேகரிக்க ஆற்றில் இறங்கியதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம், பட்கல் தாலுகாவில் உள்ள ஷிராலி கிராமத்தின் அருகே ஓடும் வெங்கடாபுரா ஆற்றில் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது.

இப்பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 14 பேர், நன்னீர் சிப்பிகளை சேகரிப்பதற்காக ஆற்றுக்குள் இறங்கியுள்ளனர். இது அப்பகுதி மக்களின் பாரம்பரிய வாழ்வாதாரத் தொழில்களில் ஒன்றாகும். சம்பவத்திற்கு முந்தைய நாள் இரவில் அப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக ஆற்றில் திடீரென நீர் வரத்து அதிகரித்து, நீரோட்டம் கடுமையாக மாறியுள்ளது. இதனை எதிர்பாராத மக்கள் திடீரென ஆற்று வெள்ளத்தில் சிக்கி, பலத்த நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் (7 பெண்கள் மற்றும் ஒரு ஆண்) நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஆற்றில் தத்தளித்த 3 பெண்கள் உள்ளூர் மக்களால் பத்திரமாக மீட்கப்பட்டு, தற்போது உடுப்பி மற்றும் மணிப்பால் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் 3 பேர் (இரண்டு பெண்கள், ஒரு ஆண்) இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் பட்கல் ஊரகக் காவல் துறையினர், கடலோரப் பாதுகாப்புப் படையினர், உள்ளூர் மீனவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் படகுகள் மூலம் ஆற்றில் தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் போர்க்கால அடிப்படையில் தலா ₹5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என்றும் முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications