என்னை ஜெ. பேசாத பேச்சா... ஆனால் ஒரு பெண்ணை ஆண் விமர்சிக்கக் கூடாதா.. கேட்கிறார் "கேப்டன்"
சென்னை: சட்டசபையில் என்னைப்பற்றி என்னென்னமோ சொல்லியிருக்கார் முதல்வர் ஜெயலலிதா. ஒரு ஆண் மகனை, ஒரு பெண் விமர்சிக்கலாம். ஆனால், ஒரு பெண்ணை ஆண்கள் விமர்சிக்க கூடாது என்பது எப்படி சரியாக இருக்கும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுள்ளார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று தூத்துக்குடி சென்ற விஜயகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிராக பொதுமக்கள் நடத்தும் போராட்டத்தை திசை திருப்புவதற்காகவே, ஆளுங்கட்சியினர் தற்போது புதிய போராட்டத்தை நடத்துகின்றனர்.
தமிழக சட்டசபையில் என்னை பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சித்து, பேசினார்கள். அதை அப்போது தடுக்கவில்லை. ஊடகங்களின் மீது அவதூறு வழக்கு தொடர்வது சரியான செயல் அல்ல. மிக தவறானது. ஊடகங்களுக்கு எவ்வித உண்மையையும் வெளிக்கொண்டு வருவதற்கான அதிகாரம் உள்ளது. அவர்கள் தங்கள் கடமையை செய்கின்றனர். அதற்காக ஊடகங்கள் மீது வழக்கு தொடர கூடாது.
ஒரு ஆண் மகனை, ஒரு பெண் விமர்சிக்கலாம். ஆனால், ஒரு பெண்ணை மற்றவர்கள் விமர்சிக்க கூடாது என்பது எப்படி சரியாக இருக்கும் என்று கேட்டார் விஜயகாந்த்.