ஸ்டாலின் திமுக தலைவராக பதவியேற்றபோது அழகிரி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா?
Recommended Video

சென்னை: திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது. திமுகவில் தன்னை சேர்த்துக்கொள்ளவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பொங்கி வரும் நிலையில், அவர் நேற்று என்ன செய்தார், எப்படி இதை எதிர்கொள்ளப்போகிறார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
தன்னை கட்சியில் சேர்க்கவில்லை என்றால் திமுக கடும் விளைவுகளை சந்திக்கும் என பேட்டியளித்து வருபவர் அழகிரி.
கருணாநிதி-தயாளு அம்மாள் மூத்த மகனாக பிறந்தும், தனது தம்பி ஸ்டாலின் அரசியலில் கோலோச்சுவதை பார்த்து புழுங்கியும், இதுவரை எதுவும் நடக்கவில்லை.

ஆலோசனை கூட்டமாம்
அழகிரி தனது வீட்டுக்கு முன்பாக பந்தலை போட்டு, ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறேன் என்ற பெயரில் பேசிக்கொண்டுள்ளார். கடந்த 24ம் தேதி முதல் இப்படித்தான் அழகிரிக்கு பொழுது போய்க்கொண்டுள்ளது. ஆனால், ஆலோசனை கூட்டத்தில் எந்த முன்னணி நிர்வாகியும் பங்கேற்கவும் இல்லை, உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை.

கூட்டம் சேரவில்லை
24ம் தேதி ஆலோசனை கூட்டம் துவங்கிய நாளில் பத்திரிகையாளர்கள் அவர் வீட்டில் குவிந்திருந்தனர். ஆனால், முக்கிய நிர்வாகிகள் வரவில்லை என்பதை அறிந்த அழகிரி ஆதரவாளர்கள், ஊடகத்தினரை அங்கேயிருந்து விரட்டியடித்தனர். தங்களது வீக்னெஸ் வெளியே தெரிந்துவிட கூடாது என்பதில் படு கவனம் காட்டினர். அப்போதே நமது ஒன்இந்தியா தமிழில், பிசுபிசுத்த அழகிரி ஆலோசனை கூட்டம் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம்.

பிசுபிசுத்த ஆலோசனை கூட்டம்
அதை அடுத்தடுத்த நாட்களும் நிரூபித்தன. ஆலோசனை பிசுபிசுத்துப்போய்தான் உள்ளது. இந்த நிலையில்தான், ஸ்டாலின் நேற்று திமுக தலைவராக பொறுப்பேற்றார். அத்தனை ஊடகங்களும் அதை ஆர்வத்தோடு ஒளிபரப்பு செய்த நிலையில், அழகிரி மட்டும் செம டென்ஷனாக காணப்பட்டார். திமுக பொதுக்குழு நடந்தபோது அழகிரி மதுரையில் இருந்தார். ஆனால் டிவியில் அந்த நிகழ்வை பார்க்காமல் தவிர்த்தார்.

என்ன செய்தார்
பொதுக்குழு காலை 9 மணிக்கு தொடங்கியது. காலை 10.30 மணியளவில் அழகிரி வீட்டில் இருந்து வெளியே வந்தார். அங்கு போடப்பட்டிருந்த பந்தலின் உள்ளே அமர்ந்து, ஆதரவாளர்கள் சிலருடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். பொதுக்குழுவில் ஸ்டாலின் பேசி முடித்து பொதுக்குழு கலைந்த பிறகு, பிற்பகல் 2 மணியளவில் அழகிரி மீண்டும் வீட்டுக்குள் சென்றார். பொதுக்குழு கூட்டத்தை அவர் பார்ப்பதை தவிர்த்தார். இந்த நிலையில் இன்றும் அழகிரி வீட்டுக்கு சென்ற ஊடகத்தினர் விரட்டியடிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications