வெளியில் வந்ததுமே இணைப்புக்கு "கோவிந்தா" போட்ட தினகரன்.. அடுத்தது என்ன?
திஹாரில் இருந்து தினகரன் வெளியே வருவது அதிமுக அம்மா கட்சியில் பல புயல்களை உருவாக்கும் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
சென்னை: அக்னி வெயில் ஆட்டம் முடிந்து விட்டது. அதிமுக அரசியலில் அக்னி தகிக்க ஆரம்பித்து விட்டது. காரணம் டிடிவி தினகரன் திஹார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த உடன் கொடுத்த பேட்டிதான்.
தினகரனை பார்க்க மாட்டோம், பேச மாட்டோம், கட்சியை விட்டு ஒதுக்கி வைத்து விட்டோம் என்றெல்லாம் ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் பேட்டி கொடுத்து வருகின்றனர்.
ஜெயிலுக்கு போவதற்கு முன்பாக நான் கட்சியை விட்டே ஒதுங்கி விட்டேன் பேட்டி கொடுத்த அதே தினகரன்தான் இப்போது நான் அதிமுக துணை பொதுச்செயலாளராக நீடிக்கிறேன். என்னை யாராலும் கட்சியை விட்டு நீக்க முடியாது என்று பேட்டி கொடுத்துள்ளார். வடிவேலுவின் அது வேற வாய்... இதுவும் நாற வாய் என்ற ரேஞ்சுக்கு இருக்கிறது தினகரன் பேட்டி.

திஹார் சிறைவாசம்
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி நள்ளிரவில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜாமீன் கொடுத்த நீதிமன்றம்
அவரின் ஜாமீன் மனுவை விசாரித்த தீஸ் ஹசாரி நீதிமன்றம் அவருக்கு ஜூன் 1ஆம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதனை அடுத்து அவர் வெள்ளிக்கிழமையன்று சிறையில் இருந்து விடுதலை ஆனார்.

துணை பொதுச்செயலாளர்
சென்னை திரும்பும் முன்பாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் பதவியில் நீடிக்கிறேன் என்றார். கட்சியில் இருந்து நீக்கியாக யாரும் அறிவிக்கவில்லை என்று கூறினார்.

யாருக்கும் அதிகாரமில்லை
என்னை நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உண்டு என்று சொன்ன அவர், சென்னை சென்று மீண்டும் கட்சி பணியை தொடர்வேன் என்று தெரிவித்துள்ளார்.மத்திய அரசுக்கு பணிந்து தமிழக அரசு செயல்பட வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன் கோஷ்டி
ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் அதிமுகவில் பல கோஷ்டிகள் உருவாகிவிட்டன. சசிகலா கோஷ்டி, தினகரன் கோஷ்டி, ஓபிஎஸ் கோஷ்டி, எடப்பாடி பழனிச்சாமி கோஷ்டி, தோப்பு வெங்கடாசலம் கோஷ்டி, தலித் எம்எல்ஏக்கள் கோஷ்டி என பல கோஷ்டிகள் உள்ளன. இதில் ஒரு கோஷ்டி எம்எல்ஏக்கள் செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாசலம், வெற்றிவேல், தங்கத்தமிழ்செல்வன் உள்ளிட்ட 10 எம்எல்ஏக்கள், 5 எம்பிக்கள் தினகரனை வரவேற்றுள்ளனர்.

அனலடிக்கும் அரசியல்
அக்னி வெயில் முடிந்த பின்னரும் தமிழக அரசியல் களம் அக்னியாய் தகித்து வருகிறது. தினகரன் வருகை அக்னியின் ஆட்டத்தை அதிகரிக்கவே செய்யும். அவரது பேட்டி அதிமுக இணைப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பது போலவே உள்ளது.

அணிகள் இணைப்பு அம்பேல்
சசிகலா குடும்பத்தை ஒதுக்கினால் மட்டுமே இணைவோம் என்பது ஓபிஎஸ் அணியின் நிபந்தனை. ஆனால் டிடிவி தினகரனோ, நான்தான் துணை பொதுச்செயலாளர் என்னை யாரும் ஒதுக்க முடியாது என்று கூறி இணைப்பு பேச்சுவார்த்தையில் குண்டு போட்டதோடு அந்த முயற்சிக்கே சமாதி கட்டிவிட்டார்.

தொண்டர்கள் கவலை
எம்ஜிஆர் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாடப்படும் இந்த சூழ்நிலையில் பிளவுபட்டு கிடக்கும் அதிமுகவும், ஆளுங்கட்சியாக இருந்தும் எதுவும் செய்ய முடியாமல் ஆள் ஆளுக்கு பதவியை காப்பாற்றிக்கொள்ள போதும் குடுமிப்பிடி சண்டையும் அதிமுக தொண்டர்களை கவலையடையவே செய்துள்ளது. அப்போ கட்சியும் இணையாது இரட்டை இலையும் கிடைக்காதா என்பதே தொண்டர்களின் கேள்வியாக உள்ளது.












Click it and Unblock the Notifications