மீண்டும் தேர்தல் எப்போது? பணப்பட்டுவாடாவை தடுக்க திட்டம் என்ன?… திருநாவுக்கரசர் கேள்வி
நிறுத்தப்பட்ட ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் மீண்டும் எப்போது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் மீண்டும் எப்போது நடக்கும்? அப்படி நடக்கும் போது பணப்பட்டுவாடா மீண்டும் நடக்காமல் இருக்குமா? இதற்கெல்லாம் தேர்தல் ஆணையம் என்ன மாற்றுத் திட்டங்களை வைத்துள்ளது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது திருநாவுக்கரசர் கூறியதாவது: தமிழகத்தில் விவசாயம் அழிந்துவிட்ட நிலையில், குடிநீர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது.
குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தக் கூடிய நிலை உருவாகிவிட்டது. தாய்மார்கள் குழந்தைகளோடு வீதிகளில் வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குடிநீர் பஞ்சத்தைப் போக்க, வறட்சியை போக்க, வேலை வாய்ப்பைத் தர, வெள்ள நிவாரணம் என 88 கோடி ரூபாய் தமிழக அரசு கேட்கும் 4 ஆயிரம் கோடிக்கும் குறைவாகவே மத்திய அரசு கொடுத்துள்ளது.
நிவாரணம்
இந்த பணம் இரண்டு மாவட்டங்களின் வறட்சி நிவாரணத்திற்கு கூட போதாது. காங்கிரஸ் காலத்தில் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கடந்த பல மாதங்களாக செயல்படுத்தப்படாமல் இருக்கிறது. வேலை செய்த தாய்மார்களுக்கு சம்பளம் தரப்படவில்லை.
புறக்கணிப்பு
எனவே, தமிழக அரசு கேட்டுள்ள நிதியை மத்தியில் ஆளும் மோடி அரசு வழங்க வேண்டும். தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு நடத்துகிறது. தமிழக அரசை புறக்கணிக்கிறது. 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 முறை பிரதமரை சந்திக்க முயன்றும், அவர்களை சந்திக்காதது கண்டனத்திற்குரியது. எம்பிக்களை தேர்ந்தெடுத்த மக்களை மத்திய அரசு அவமானப்படுத்தியுள்ளது.
மீண்டும் தேர்தல் எப்போது?
வரும் 12ம் தேதி வாக்களிக்க வேண்டிய நிலையில், ஆர். கே. நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா இறந்து 4 மாதங்கள் முடிந்து விட்டது. இப்போதுள்ள சட்டப்படி 6 மாதத்தில் தேர்தல் நடத்த வேண்டும். ஆக. தேர்தல் நடத்த இன்னும் 2 மாதங்களே உள்ளன. தேர்தலை எப்போது நடத்தப் போகிறார்கள்? கால நீடிப்பிற்கான சட்டத்திருத்தம் ஏதாவது இருக்கிறதா?
தடுக்கத் திட்டம்?
எண்ணற்ற பார்வையாளர்கள், காவல்துறையினர், ராணுவத்தினர் என குவிக்கப்பட்டாலும் கடைசி நாள் வரை ஆர். கே. நகர் தொகுதியில் பணப்பட்டுவாடாவை தடுக்க முடியவில்லை. ரத்து செய்து விட்டு மீண்டும் நடக்கும் தேர்தலில் மட்டும் பணப்பட்டுவாடா நடக்காமல் இருக்குமா? எப்படி பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் தடுக்கும்? அதற்கெல்லாம் திட்டம் ஏதாவது தேர்தல் ஆணையத்திடம் உள்ளதா என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.