புதிய கொறடாவை நியமிக்கவே இல்லை... அதிமுக எம்.எல்.ஏக்கள் அஞ்ச வேண்டாம்: மாஃபா பாண்டியராஜன்
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய அரசுதான் பதவியேற்றுள்ளது; புதிய கொறடா நியமிக்கப்படவில்லை; ஆகையால் எம்.எல்.ஏக்கள் அச்சப்பட வேண்டாம் என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான புதிய அரசில் இன்னமும் கொறடா நியமிக்கப்படவில்லை; ஆகையால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கொறடா உத்தரவு குறித்து அச்சப்பட வேண்டாம் என ஓபிஎஸ் அணியின் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் கொள்கைக்கும், குறிக்கோளுக்கும், கோட்பாடுகளுக்கும் எதிராகவும் முரணாகவும் செயல்பட்டதால் சசிகலா அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மதுசூதனன் அறிவித்துள்ளார்.

மேலும் அதிமுக கொறடா எஸ்.ராஜேந்திரன், திண்டுக்கல் சீனிவாசன், வி.பி.கலைராஜன், டாக்டர் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, தங்கத் தமிழ்செல்வன் உள்ளிட்ட 13 பேர் நீக்கப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாஃபா பாண்டியராஜன், அதிமுக கொறடா ராஜேந்திரன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சரவை இன்னமும் கொறடா என்று யாரையும் நியமிக்கவில்லை.
ஆகையால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கொறடா உத்தரவு குறித்து அச்சப்பட வேண்டாம். கொறடா உத்தரவு அதிமுக எம்எல்ஏக்களை கட்டுப்படுத்தாது. கொறடா இல்லாததால் எம்எல்ஏக்கள் யாருக்கும் அச்சப்பட தேவையில்லை. எம்.எல்.ஏக்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications