ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் முடிவை நாடே எதிர்பார்க்கிறது: கருணாநிதி
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை நாடே எதிர்பார்க்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
அவரது பேட்டி விவரம்:
நிருபர்: கல்வியாண்டு தொடங்கிவிட்டது. தனியார் கல்லூரிகளில் 25 சதவிகித சிறப்பு ஒதுக்கீட்டினை இந்த ஆண்டு ஒதுக்க முடியாது தனியார் கல்லூரிகளின் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது. தமிழக அரசும், மத்திய அரசும் நிதி ஒதுக்கவில்லை என்று சொல்கிறார்கள். மாணவர்கள் சேர்க்கையில் இது மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறதே?
கருணாநிதி: இதற்காக மிகவும் வருந்துகிறேன். ஏதோ ஒரு காரணத்தை காட்டி தனியார் பள்ளிகளில், கல்லூரிகளில் மாணவர்களுக்கு இழைக்கப்படும் தீங்கினை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
நிருபர்: பெங்களூரு சொத்து குவிப்பு வழக்கில், போகிற போக்கைப் பார்த்தால், நாளைய தினமே இறுதித் தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறதே?
கருணாநிதி: அது பற்றி நான் சொல்ல முடியாது. பெங்களூரு சொத்து குவிப்பு வழக்கின் முடிவை நாடே எதிர்பார்க்கிறது.
நிருபர்: நாமக்கல்லில் ஓரிரு இடங்களில் மறு வாக்குப் பதிவு என்று செய்தி வந்துள்ளதே?
கருணாநிதி: அது ஒரு செய்தி; அவ்வளவுதான்.
நிருபர்: தமிழகத்தில் தொடர்ந்து மின் பற்றாக்குறை, மின்வெட்டு நீடித்து வருகிறது. அதன் காரணமாக கொலை, கொள்ளைகள் பெருகி, வெடிகுண்டு சம்பவங்களும் நடைபெறுகின்றன. தமிழக அரசு சார்பில் எதுவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையே?
கருணாநிதி: முதலில் நாட்டில் வாழ்வோம் என்று நம்பினோம்; அந்த நம்பிக்கை எல்லாம் வீணாகி இப்போது காட்டில் வாழ வேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருக்கிறோம்.
துரைமுருகன் அதிலே நல்ல "எக்ஸ்பர்ட்":
நிருபர்: உச்ச நீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு பற்றி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக வந்துள்ளதே?
கருணாநிதி: முல்லைப் பெரியாறு பற்றி இன்று வந்துள்ள தீர்ப்பு மகிழ்ச்சிக்குரியது. கேரளா தடுப்பு அணை கட்டக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களுக்குள் தற்போது நான் நுழைய விரும்பவில்லை. விவரங்கள் தேவையென்றால், முல்லைப் பெரியாறு பற்றி அறிய வேண்டுமேயானால், இதோ இங்கே முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன், அதிலே நல்ல "எக்ஸ்பர்ட்", அவரைக் கேட்டுக் கொள்ளுங்கள்.
நிருபர்: தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க சார்பில் பல புகார்களைக் கொடுத்திருக்கிறீர்களே, ஏதாவது நடவடிக்கை எடுத்ததா?
கருணாநிதி: இதுவரையில் எடுக்கவில்லை.
நிருபர்: ஜல்லிக்கட்டு பற்றி உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருப்பது குறித்து?
கருணாநிதி: தீர்ப்பு பற்றிய முழு விவரம் வரவில்லை. எனவே அது பற்றி இப்போது கூறுவதற்கில்லை.
நிருபர்: தமிழகத்தில் அன்றாடம் கிலோ கணக்கில் தங்கம் கொள்ளையடிக்கப்படுகின்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. சட்டம், ஒழுங்கே சீர்கெட்டுக் கிடக்கிறதே, அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
கருணாநிதி: தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்ளும் அளவில் இல்லை.
நிருபர்: காவல் துறையினரிடம் அ.தி.மு.க. சார்பில் கொடுக்கப்படும் புகார்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்து விட்டு, தி.மு.க. சார்பில் கொடுக்கப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்களே?
கருணாநிதி: அது தான் அ.தி.மு.க. அரசின் காவல் துறையினர் கடைப் பிடிக்கும் மரபு