உதவிக்கு வந்த 100 ராணுவ வீரர்களை எதுவும் செய்யவிடாமல் 10 மணிநேரம் கடுப்பேற்றிய சென்னை மாநகராட்சி
சென்னை: ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்த 100 ராணுவ வீரர்கள் எந்த இடத்திற்கு சென்று மீட்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தெரிவிக்காமல் அவர்களை 10 மணிநேரம் காத்திருக்க வைத்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள ஹைதராபாத்தில் இருந்து 100 ராணுவ வீரர்கள் சென்னை வந்துள்ளனர். நிவாரணப் பொருட்கள், மக்களை மீட்க படகுகளுடன் அவர்கள் சென்னையை அடைந்தனர்.

சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு மீட்பு பணியை மேற்கொள்ள தயாராக நின்றுள்ளனர். ஆனால் அவர்கள் எந்த பகுதிக்கு சென்று மீட்பு பணி மேற்கொள்ள வெண்டும் என்று தமிழக அரசு தெரிவிக்காமல் அவர்களை காக்க வைத்துள்ளது.
இறுதியாக பிற்பகல் 1.30 மணிக்கு தான் மாவட்ட நிர்வாகம் அவர்களுக்கு எங்கு செல்ல வேண்டும் என்ற தகவலை அனுப்பியுள்ளது. அதன் பிறகு 2 டிரக்குகளில் வீரர்கள் திருவான்மியூரை அடைந்துள்ளனர். அங்கும் வீரர்களை எதுவும் செய்யவிடாமல் 3.30 மணி வரை காத்திருக்க வைத்துள்ளனர்.
ஒரு வழியாக வீரர்கள் இருந்த டிரக்குகள் பள்ளிக்கரணையை அடைந்துள்ளது. அங்கு மக்கள் நிவாரணப் பொருட்களுக்கு அல்லாடுவதை பார்த்த ராணுவ வீரர்கள் வாகனங்களில் இருந்து இறங்கி அவர்களுக்கு உதவி செய்தனர்.
அவர்கள் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிக் கொண்டிருக்கையில் நீங்கள் மீட்பு பணியை மேற்கொள்ள வேண்டிய இடம் இது அல்ல என்று கூறி மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வீரர்களை மீண்டும் வாகனங்களில் ஏற வைத்துள்ளனர்.
இது குறித்து லெப்டினன்ட் கர்னல் ராஜேந்திர சிங் கூறுகையில்,
எங்கு செல்ல வேண்டும் என்பதை மாவட்ட நிர்வாகம் தான் எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். எங்களுக்கு நகரை பற்றியோ, எங்கு வெள்ளமாக உள்ளது என்றோ தெரியாது. எங்கள் பணி மக்களை மீட்பது என்றார்.












Click it and Unblock the Notifications