7 தமிழர் விடுதலையில் சிக்கல்.. எங்கே இருக்கிறது முட்டுக்கட்டை? என்ன செய்திருக்க வேண்டும் தமிழக அரசு?
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு "அதிகாரம்" இருந்தாலும் உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று கூறி உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டோரின் கருணை மனுக்களை பல ஆண்டுகாலம் கழித்து ஜனாதிபதி நிராகரிப்பதை சுட்டிக் காட்டி ராஜிவ் வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது தூக்கை ஆயுள் தண்டனையாக மாற்றியது உச்சநீதிமன்றம். அத்துடன் குற்ற விசாரணை முறைச் சட்டம் (CRPC) பிரிவு 432 மற்றும் 433-ன்படி, தண்டனை மாற்றுதல் அல்லது தள்ளுபடி செய்தல் நடவடிக்கைக்கு உட்பட்டது என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.
குற்ற விசாரணை முறைச் சட்டம் 432 மற்றும் 433-ன்படி தண்டனை மாற்றுதல் அல்லது தள்ளுபடி செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. இதனடிப்படையிலேயேதான் தமிழக அரசு, 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்தது.
சி.ஆர்.பி.சி. 435 சொல்வது என்ன?
அதே நேரத்தில் தடா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதால் குற்ற விசாரணை முறைச் சட்டம் 435-ன்படி மத்திய அரசிடம் "கருத்தையும்" கோருவதாகவும் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்திருந்தார்.
குற்ற விசாரணை முறைச் சட்டம் 435 என்ன சொல்கிறது? (Section 435: The Code of Criminal Procedure-State Government to act after consultation with Central Government in certain cases) மத்திய அரசுடன் "ஆலோசித்துவிட்டு" தண்டனை குறைப்பு அல்லது தண்டனை மாற்றத்தை மேற்கொள்ளலாம் என்று கூறுகிறது.
ஒப்புதல் பெறவில்லை- மத்திய அரசு
இப்போது இதைத்தான் மத்திய அரசு கெட்டியாக பிடித்துக் கொண்டு வாதிடுகிறது. இது குறித்து சொலிசிட்டர் ஜெனரல் அசோக் பான் கூறுகையில், குற்ற விசாரணை முறை சட்டத்தை தமிழக அரசு முறையாக பின்பற்றவில்லை. உரிய சட்ட வழிமுறைகளைப் பின்பற்றாமல் அரசியல் காரணங்களுக்காக தமிழக அரசு அவசரம்காட்டியுள்ளது.
குற்ற விசாரணை முறை சட்டம் 435ஆவது பிரிவின்படி மத்திய அரசின் ஒப்புதல் (concurrence) இல்லாமல் இப்படி தண்டனை குறைப்பு அல்லது மாற்றத்தை ஒரு மாநில அரசு செய்ய முடியாது. அதைத்தான் இன்று உச்சநீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினோம் என்றார்.
ஆலோசித்தாலே போதும்- வழக்கறிஞர் துரைசாமி
ஆனால் ராஜிவ் காந்தி வழக்கில் நளினிக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமியோ, குற்ற விசாரணைமுறை சட்டத்தின்படி தண்டனை குறைப்பு மற்றும் மாற்றம் செய்வதற்கு முன்பாக மத்திய அரசுடன் ஆலோசிக்கலாமே (consult) தவிர ஒப்புதல் (consent) பெற வேண்டிய அவசியம் இல்லை என்று கூறுகிறார்.
தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு
இன்றைய விசாரணையிலும் கூட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்சும், தண்டனை மாற்றம் அல்லது குறைப்புக்கு தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் உரிய வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றுதான் கூறியுள்ளது.
இந்த 7 வழிமுறைகளை செய்துவிட்டு அறிவிக்கனுமாம்
குற்ற விசாரணை முறை சட்டம் 435-ன் படி தண்டனை மாற்றம் அல்லது குறைப்பு செய்ய 6 பேர் கொண்ட அறிவுரைக் குழு அமைக்க வேண்டும்; இந்த குழுவில் சிறைத் துறை ஏடிஜிபி, வேலூர் சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்க வேண்டும்;
இந்த அறிவுரைக் குழு, தண்டனை மாற்றம் அல்லது குறைப்பை மாநில அரசுக்கு பரிந்துரைக்கும்; மாநில அரசானது இந்த பரிந்துரைகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கும்; இதன் மீது உள்துறை அமைச்சகம் முடிவெடுத்து மாநில அரசுக்கு பதில் அனுப்பும்
தேவைப்பட்டால் உள்துறை அமைச்சகம், சட்ட அமைச்சகத்திடம் விளக்கம் கோரலாம். அதன் பின்னர் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படும். அதே நேரத்தில் மத்திய அரசு எந்த முடிவெடுத்தாலும் அது மாநில அரசை கட்டுப்படுத்தாது. ஏனெனில் 435வது பிரிவானது மத்திய அரசிடம் ஆலோசிக்கத்தான் சொல்லியிருக்கிறது.. மத்திய அரசின் ஒப்புதலை பெறச் சொல்லவில்லை.,
இப்படியான "உரிய" வழிமுறைகளை செய்துதான் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்க வேண்டும் என்கின்றனர் சட்டவல்லுநர்கள். இதுதான் தற்போதைய சிக்கலுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
இப்படியும் ஒரு காரணம்
அதே நேரத்தில் தற்போதைய முட்டுக்கட்டை குறித்து தூக்குத் தண்டனை கைதியாக இருந்து விடுதலையான தமிழ் தேச விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலர் தியாகுவோ, தூக்கு தண்டனைகளை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக ஏற்கெனவே குறைத்துள்ளது. அதற்கு எதிராக மத்திய அரசு மறுசீராய்வு மனு போட்டுள்ளது. அந்த மனு நிலுவையில் இருக்கிறது. அப்படி ஒரு மனு நிலுவையில் இருக்கும் போதே அந்த மனு தொடர்புடைய வழக்குகளில் உள்ளவர்களை தமிழக அரசு விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் சொல்லிவிடாது. அந்த மனு மீது உச்சநீதிமன்றம் இறுதி முடிவு எடுக்க வேண்டும். அத்துடன் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய பிரிவின் கீழ் 7 பேரும் விடுதலையாவது உறுதியானதுதான். ஆனால் அவர்களது விடுதலை சற்று தாமதமாகும் என்று சுட்டிக்காட்டுகிறார்.
அதென்ன அரசியல் சாசனப் பிரிவு 161?
கைதிகள் விடுதலை தொடர்பில் அரசியலமைப்பு சட்டத்தின் 161வது பிரிவும் முக்கியமானது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 161வது பிரிவின் படி கைதிகளை முன்கூட்டியே விடுதலை செயய் மாநில அமைச்சரவைக்கு அதிகாரம் உண்டு. இதனடிப்படையில் விடுதலை செய்யலாம் என்றும் ஒருதரப்பு கூறுகின்றனர். ஆனால் அரசியல் சட்டம் 72ன் கீழ், குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கபட்டிருந்தால், அது தொடர்பாக அரசியல் சட்டம் 161ன் படி உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று அரசியல் சட்டத்தின் 257 (1) பிரிவு கூறுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் 1991-லேயே தெரிவித்துள்ளது. இதையும் நேற்று தமது அறிக்கையில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார். அதனாலேயே குற்ற விசாரணைமுறை சட்டத்தின் கீழ் 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு எடுத்ததாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதனால் இப்போது சிக்கல் குற்ற விசாரணைமுறை சட்டம் (சி.ஆர்.பி.சி) 435ன் கீழ் உரிய விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்பதுதான்!
சரி.. உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்போம்..