சிறுவாணி தடை: தமிழகத்தின் முதுகில் குத்திய துரோகங்களுக்கு தாஜா செய்கிறதாம் மத்திய அரசு! #siruvani
காவிரி பிரச்சனையில் முதுகில் குத்தியதால் மத்திய அரசு மீது தமிழகம் கோபத்தில் இருக்கிறது. இதை தணிக்கும் வகையில் தற்போது சிறுவாணியில் கேரளா அணை கட்ட தடை விதித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னை: சிறுவாணியின் குறுக்கே கேரளா அணை கட்ட தடை விதித்துள்ளதாக தமிழக அரசுக்கு மத்திய அரசு திடீரென கடிதம் அனுப்பியிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட தமிழகம் சார்ந்த பிரச்சனைகளில் முதுகில் குத்திய துரோகங்களால் கொந்தளிப்பில் இருக்கும் தமிழர்களை சமாதானப்படுத்தும் மத்திய பாஜக அரசின் ஒரு சிறுமுயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை நிராகரித்தது மத்திய அரசு. ஏனெனில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புக் கொண்டால் கர்நாடகாவில் அதன் அரசியல் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பது மட்டுமே நிதர்சனம்.
ஆனால் தமிழகத்திலும் கேரளாவிலும் ஒருபோதும் பாஜகவால் ஆட்சி அமைத்துவிட முடியாது. இதனால்தான் காவிரி, ஜல்லிக்கட்டு, மீனவர் பிரச்சனை, மீத்தேன், மேகதாது அணை, கெயில் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளிலும் தமிழகத்தின் குரலை கேட்கக் கூடாது என்பதில் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறது மத்திய அரசு.
திடீர் தடை
தமிழகத்துக்கு துரோகம் செய்தாக வேண்டும் என்ற உள்நோக்கத்துடன்தான் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளாவுக்கு அணை கட்ட முதலில் அனுமதி கொடுத்தது மத்திய பாஜக அரசு. இப்போது அதற்கு தடை விதித்துவிட்டதாக கூறுகிறது. அதுவும் இந்த தடை கூட காவிரி தொடர்பாக தமிழக அரசின் வழக்கு முடியும்வரைதானாம்.
தமிழகத்தில் கிளர்ச்சி
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்த மத்திய பாஜக அரசைக் கண்டித்து ஒட்டுமொத்த தமிழகமுமே கிளர்ந்தெழுந்து போராடியது. தமிழகத்தின் முன்னெப்போதும் இல்லாத வகையில் 2 நாட்கள் ரயில் சேவையை முடக்கி பல லட்சம் கைதாகினர். மத்திய அரசின் துரோகங்களால் இந்திய ஒருமைப்பாடு கேள்விக்குறியாகும் என்று வைகோ உள்ளிட்ட தலைவர்கள் எச்சரிக்கையும்விடுத்திருந்தனர்.
பிடிவாதம்
தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்பை தமிழக பாஜக நன்கு உணர்ந்ததாலேயே டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரினர். ஆனாலும் பாஜகவும் மத்திய அரசும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என பிடிவாதமாக இருந்து வருகிறது.
கோபத்தை தணிக்க...
தற்போது தமிழகத்தின் கோபத்தை தணிக்க திடீரென சிறுவாணியில் அணை கட்ட கேரளாவுக்கு தடை விதித்துவிட்டதாக தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியிருக்கிறது. அதே நேரத்தில் காவிரியின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் அணை கட்ட கடப்பாரையுடன் கிளம்பியுள்ள கர்நாடகாவுக்கு இதே தடையை விதிக்க மத்திய பாஜக அரசுக்கு திராணி இருக்கிறதா? என்பதுதான் தமிழக மக்களின் கேள்வி.