சசிகலா- தினகரன் கைதுக்கு குஷியான தீபா... ஐடி ரெய்டு மட்டும் உள்நோக்கம் என்பதன் பின்னணி என்ன?
சசிகலாவும், தினகரனும் கைது குறித்து சந்தோஷப்பட்ட தீபா, தற்போது நடைபெற்று வரும் ஐடி ரெய்டுகளுக்கு மட்டும் உள்நோக்கம் என்று தெரிவிப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவும், இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரனும் கைது செய்யப்பட்டபோது குஷியான தீபா, தற்போது ஐடி ரெய்டுகளுக்கு மட்டும் உள்நோக்கம் என்று புதிய அர்த்தம் கற்பிப்பது ஏனோ என்று மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அங்கு சென்ற அவரது அண்ணன் மகள் தீபாவுக்கும் கணவர் மாதவனுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கான இறுதி அஞ்சலியின்போதும் சசிகலா குடும்பத்தினரே ஜெயலலிதாவின் உடலை சுற்றியிருந்தனர்.
ஆனால் உறவுகளான தீபாவும் அவரது கணவர் மாதவனும் யாரோ மூன்றாவது மனிதர்களை போல் ஜெயலலிதாவின் உடலை பார்த்துவிட்டு செல்ல நேரிட்டது.

சசிகலா அரணாக இருந்தார்
ஜெ.மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக உடைந்தவுடன் தீபா பகிரங்கமாக சசிகலா குறித்த புகார்களை கூறினார். மேலும் தாங்கள் ஜெயலலிதாவை அணுக முடியாதபடி சசிகலாவும் அவரது உறவினர்களும் அரணாக இருந்து விட்டனர் என்றும், போயஸ் கார்டனில் ஜெயலலிதா தன் சொந்த மகள் போன்று வளர்த்தபோதிலும் தனது திருமணத்துக்கு அவர் வரமுடியாதபடி செய்ததும் சசிகலாதான் என்றும் தீபா பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

சசிகலா கைது
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா கைது செய்யப்பட்டார். இதையடுத்து அன்று இரவே ஜெயலலிதா சமாதிக்கு வந்த தீபா, நியாயம் ஜெயித்து விட்டது. நீதி நிலைநாட்டப்பட்டது என்றெல்லாம் பேசினார். மேலும் இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டதற்கும் தீபா மகிழ்ச்சி தெரிவித்தார். கைது நடவடிக்கை நியாயமானதே என்றும் தெரிவித்தார்.

போயஸ் கார்டனில் கலாட்டா
இந்நிலையில் போயஸ் கார்டனுக்கு கடந்த ஜூன் மாதம் 11-ஆம் தேதி சென்ற தீபா அங்கு ரகளையில் ஈடுபட்டார். கணவர் மாதவன் மற்றும் தம்பி தீபக்கை கடுமையாக விமர்சித்தார். போயஸ் கார்டன் இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்ற அரசு அறிவித்தது. இதையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து நீதிமன்றத்துக்கு செல்லாத தீபா, போயஸ் கார்டன் இல்லத்துக்கு சொந்தம் கொண்டாடி வழக்கு தொடர்ந்தார்.

உள்நோக்கம் கொண்டது என பேச்சு
தீபாவுக்கு இன்று பிறந்தநாளையொட்டி நள்ளிரவு ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மட்டும் தான் ரெய்டு. இது நிச்சயம் அரசியல் உள்நோக்கம் கொண்டதுதான். அரசியல் மாற்றங்கள் ஏற்படும் சூழலில் இந்த ரெய்டு நடத்துவதால் மத்திய அரசு ஆதாயம் அடைய பார்ப்பதாக தெரிகிறது. ஜெயலலிதாவை கொடுமைபடுத்தியவர்கள் மீது வேறு விதமாக பழிவாங்கலாம் என்று கடுமையாக பேசியுள்ளார்.

அச்சம் ஏன்
இந்த ஐடி ரெய்டுகளால் போயஸ் கார்டன் இல்லத்துக்கு ஏதாவது பங்கம் வந்து விடுமோ அல்லது தனக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக தீபா பேசிய பேச்சிலேயே தெரிகிறது. ஒருவரை தண்டிக்க வேண்டும் என்றால் அது சட்டரீதியாக மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் வேறு விதமாக தண்டிக்கலாம் என்று கூறுவதன் அர்த்தம் என்ன, வன்முறையை கையில் எடுக்க வேண்டும் என்கிறாரா என்பதை தூங்கி எழுந்து வந்து தீபா விளக்கம் அளித்தால் மட்டுமே புரியும்.












Click it and Unblock the Notifications