விருத்தாசலம் திமுக வேட்பாளர் மாற்றப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு- தீக்குளிக்க முயற்சி
விருத்தாசலம்: விருத்தாசலம் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் தங்க. ஆனந்தன் திடீரென மாற்றப்பட்டதற்கு அக்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திமுக தலைமையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சிலர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம் தொகுதியில் திமுக வேட்பாளராக தங்க. ஆனந்தன் அறிவிக்கப்பட்ட உடனேயே கடும் எதிர்ப்பு எழுந்தது. ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த தங்க. ஆனந்தனை எப்படி விருத்தாசலம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கலாம்? என கொந்தளித்தனர்.
திமுகவினர் போராட்டம்
அத்துடன் சென்னை அண்ணா அறிவாலயத்தை திமுகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு திமுக மாஜி எம்எல்ஏ குழந்தை தமிழரசன் பின்னணியில் இருந்தார். அவரும் விருத்தாசலத்தில் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினார்.
காங். எதிர்ப்பு
மேலும் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத நபரை இறக்குவதா? என காங்கிரஸ் சார்பிலும் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டன. இந்த பரபரப்புகளுக்கு மத்தியில்தான் திமுக வேட்பாளர் தங்க. ஆனந்தன் மாற்றப்பட்டு பாவாடை கோவிந்தசாமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தீக்குளிப்பு முயற்சி
ஆனால் தற்போது தங்க. ஆனந்தன் மாற்றப்பட்டதைக் கண்டித்தும் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்க. ஆனந்தனுக்கு ஆதரவாக சிலர் தீக்குளிக்கவும் முயன்றனர்.
ஸ்டாலின் பிரசாரம் ரத்து
இதனிடையே விருத்தாசலம் தொகுதியில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் ஸ்டாலின் பிரசாரம் செய்ய இருந்த மேடையிலேயே சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்றும் தங்க. ஆனந்தன் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து விருத்தாசல பிரசார கூட்டத்தை ஸ்டாலின் ரத்து செய்துவிட்டார். இதனால் தற்போது விருத்தாசலம் தொகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.