திராவிட அரசியல் செய்வதாக அறிவித்த கமல் கட்சி பெயரில் 'திராவிடத்தை' காணவில்லை ஏன்?
Recommended Video
மதுரை: நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள கட்சிக்கு 'மக்கள் நீதி மய்யம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதுவரை தமிழகம் கண்ட அரசியல் கட்சிகளின் பெயர்களில் இருந்து வேறுபட்டு இந்த பெயர் அமைந்துள்ளது என்பதை பார்த்த உடனே சட்டென புரிந்து கொள்ள முடிகிறது.
"சட்ட பஞ்சாயத்து இயக்கம் மாதிரி ஒரு பேரு" என்று நெட்டிசன்கள் கூறுவதை புறம்தள்ள முடியாது.
பொதுவாக தமிழக அரசியல் கட்சிகள் திராவிடம் என்ற பெயரை கட்சியில் சேர்த்தே அரசியல் செய்து வந்துள்ளன. திராவிட முன்னேற்ற கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் போன்றவை இதற்கு நல்ல உதாரணங்கள். அதில் உச்சம் தொட்டவர் விஜயகாந்த். எப்படி தெரியுமா? தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டினார்.
இதை, திராவிட அரசியலில் ஊறிய, சசிகலா கணவரான நடராஜன் போன்றோர் கிண்டல் செய்து பேட்டியளித்தனர். தேசியம் வேறு திராவிடம் வேறு என்ற வித்தியாசம் தெரியாமல் விஜயகாந்த் இப்படி செய்துவிட்டாரா என்று நடராஜன் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் பழைய கட்சிகளில், திராவிட என்ற சொல்லாடலை பயன்படுத்தாத மாநில கட்சியாக இருந்து வருகிறது.
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபத்தில் ஒரு மேடை உரையில், இப்போதெல்லாம் திராவிடம் என்று கட்சி பெயரை சூட்டிக்கொள்ள புதிய கட்சி தலைவர்கள் அஞ்சுகிறார்கள். இது நாம் தமிழர் பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றி என கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான் கமல்ஹாசன் தனது கட்சிக்கு 'மக்கள் நீதி மய்யம்' என்று பெயர் சூட்டியுள்ளார். திராவிட அரசியலை முன்னெடுத்து வெற்றி காணப்போவதாக நேற்று கூட பேசியிருந்தார் கமல். ஆனால் கட்சியின் பெயரில் திராவிட என்ற வார்த்தை வரவில்லை.
திராவிட அரசியலை முன்னெடுக்க உள்ளதாக கமல் கூறினாலும், அடிப்படையில் அவர் தன்னை காந்தியவாதியாக முன்னிலைப்படுத்தியவர். எனவே, திராவிட என்ற பெயரை சூட்டி தன்னை வட்டத்திற்குள் அடைக்க விரும்பவில்லை என்பதும், காந்திய கொள்கை அடிப்படையில் அவர் தேசியத்தையே மையப்படுத்துவார் என்பதையும், கட்சியின் பெயரை வைத்து புரிந்து கொள்ள முடிகிறது.