அமராவதி அணைக்கு தண்ணீரை நிறுத்தி குளிர்பான ஆலைகளுக்கு விற்க முயற்சிக்கும் கேரளா!
உடுமலைப்பேட்டை: அமராவதி அணைக்கு ஆதாரமான பாம்பாற்று நீரைத் தடுத்து குளிர்பான தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்யும் 'கொள்ளை' நோக்கத்துடனேயே அணை கட்டும் திட்டத்தை கேரளா மேற்கொண்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் துவங்கும் அமராவதி ஆறு, கரூரில் காவிரியில் கலக்கிறது. இந்த அமராவதி அணை நீர்ப்பிடிப்பு பகுதிகள், கேரள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளன.
இந்த அணைக்கு 15 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும். ஆனால் பெரும்பாலான ஆண்டுகளில் சுமார் 8 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமேகிடைக்கும். அமராவதி அணைக்கு கேரள மாநில எல்லைக்குள்ள உள்ள பாலாறு, தேனாறு, பாம்பனாறு, காந்தலாறு, சின்னாறு, மூணாறு ஆகியவற்றில் இருந்து தண்ணீர் வரும்.

அமராவதி அணை தண்ணீரை நம்பி கோவை, திருப்பூர், கரூரில் 56 ஆயிரம் ஏக்கரில் இருபோக சாகுபடி நடந்து வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் பற்றாக்குறையால் ஒரு போக சாகுபடியாக சுருங்கியது.
இந்நிலையில் கேரள மாநில பகுதிகளில் உள்ள காடுகளை அழித்து அவற்றை விவசாய நிலங்களாக மாற்றும் முயற்சியில் கேரள அரசு ஈடுபடுவது தெரிய வந்துள்ளது. அமராவதி அணைக்கு தண்ணீர் தரும் பாலாறு, கல்லாறு, பாம்பாறு நீர்வழி பாதைகளில் தற்காலிக மண் அணைகளையும், மரப்பட்டைகளையும் கொண்ட பல தடுப்பணைகளை ஏற்படுத்தியுள்ளது
கேரளாவின் தடுப்பணைகள் கட்டும் நடவடிக்கை தற்போது 5 இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. திட்டப்படி தடுப்பணைகள் கட்டப்பட்டால் திருப்பூர், கரூர் மாவட்ட பகுதிகளில் 56 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கும் குடிநீர், உணவு உற்பத்தியின்றி அழிந்து பாலைவனமாக மாறிப்போகும் நிலை ஏற்படும்.
இவ்வளவையும் அடாவடியாக மேற்கொள்ளும் கேரளா ஒன்றை மட்டும் செய்யாமல் ஏமாற்றி வருகிறது. அமராவதி ஆறு என்பது காவிரியின் கிளை நதி. காவிரி நதிநீர் ஆணையம் வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பில் அமராவதி காவிரியின் கிளைநதி என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
இதனால் அமராவதிக்கு நீர் ஆதாரமான பாம்பாற்றின் குறுக்கே எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டுமெனில் காவிரி நடுவர் மன்றத்திடம் கட்டாயம் அனுமதி பெற வேண்டும்- மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டும். இந்த இரண்டையும் கேரளா செய்யாமலேயே தடுப்பணை கட்ட முயற்சிப்பது சட்டவிரோதமாகும்.
அத்துடன் கேரளா இப்போது விளைநிலமாக மாற்றியிருக்கும் பகுதிகளில் ஏலக்காய், கிராம்பு போன்ற பணப்பயிரைத்தான் அதிகபட்சமாக பயிரிட முடியும். ஏனெனில் அவை அனைத்துமே மலைப்பாங்கானவை. சமவெளிப்பகுதியே அல்ல. பிறகு எதற்கு வம்படியாக அமராவதிக்கு செல்லும் நீரை கேரளா மடை மாற்றுவது?
தமிழகத்துக்குப் போக வேண்டிய நீரை வேண்டுமென்றே தடுத்து, தமிழகத்துக்கு 56 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பும் பாலைவனமாகப் போனாலும் பரவாயில்லை என்ற கேடுகெட்ட எண்ணத்துடன் "தனியார் குளிர்பான நிறுவனங்களை கொள்ளை லாபம் பார்க்க தண்ணீரை தாரை வார்க்கும்" சதியே தவிர வேறு எதுவும் இல்லை.
வாழ்வதற்கு அடிப்படை ஆதாரமான பால், முட்டை, மாட்டு இறைச்சி, அனைத்து வகை காய்கறிகளும் இந்த தமிழ்நாட்டு நிலப்பரப்பில்தான் பயிரிடப்பட்டு நம் வயிற்றுக்குள் போகிறது என்கிற கிஞ்சித்தும் நன்றி உணர்வற்ற மரப்போக்கும் மனப்போக்கும்தான் கேரளாவின் அட்டூழியத்துக்கு அடிப்படை.
முல்லைப் பெரியாறில் தமிழர்கள் தங்களது ஆற்று நீர் உரிமையை வென்றுவிட்டார்கள் என்ற கோபம் கேரளாவுக்கு! காவிரிநதிநீரில் தங்களது ஆற்று நீரை பெற்றுவிட்டார்கள் என்ற கோபம் கர்நாடகாவுக்கு! இதனால்தான் அமராவதியை அபகரிக்கவும் காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டி தமிழக நீரை கபளீகரம் செய்யவும் கேரளா, கர்நாடகா அரசுகள் வரிந்துகட்டுகின்றன.
தமிழகமே ஓரணியில் திரண்டால்தான் இந்த முயற்சிகளை தடுக்க முடியும் என்பதை தமிழர்கள் உணர்ந்தாக வேண்டும்.












Click it and Unblock the Notifications