ஜனநாயகம் என்ற பெயரில் மறைமுகமாக இன்னும் மன்னர் ஆட்சி தான் நடைபெறுகிறதோ??
சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் வந்து குவிகின்றன .
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதை விட போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் காந்தியை விட அனுபவம் மிக்க தலைவர்கள் காங்கிரஸில் இருக்கும்போது திரு. ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட என்ன காரணம் இருக்க கூடும் .

அவர் திறமையானவராகவே இருக்கட்டும். அனால் இந்த தேர்வுக்கு அவர் ராஜீவ் காந்தியின் மகன் என்பது தான் கூடுதல் தகுதி. திருமதி சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக 19 ஆண்டு காலம் இருந்த பின்பு பின் அவரது மகன் ராகுல் காந்திக்கு அந்த பதவி இப்போது கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் போட்டியற்ற ஒருமனதாக தேர்வு. ஒரு குடும்ப அரசியலின் தாக்கம் தானே இந்த தேர்வு என்று ஒரு எண்ணத்தை ஏற்படுத்துகிறது .
ஆண்டாண்டு கால பழமையான கட்சி காங்கிரஸ் என்றாலும் அந்த கட்சியை நேரு குடும்பத்தினரே அதிகம் வழிநடத்தி வந்திருக்கின்றனர். மோதிலால் நேரு, அவரைத் தொடர்ந்து அவரது மகன் ஜவஹர்லால் நேரு, அவரது மகள் இந்திராகாந்தி, அதன் பின் அவர் மகன் ராஜீவ் காந்தி, அதன் பின் அவரது மனைவி சோனியா காந்தி, இப்போது அவரது மகன் ராகுல் காந்தி என்று தொடர்கிறது இந்த வாரிசு அரசியல் கதை.
இடையில் வேறு சில தலைவர்கள் கட்சியில் இருந்தாலும் பெரும்பாலும் நேரு குடும்பத்தின் வசமே இது இருந்து வந்திருக்கிறது. இனியும் இருக்கப் போகிறது. இதேபோலத்தான் திமுகவிலும் நடந்தது. கருணாநிதிக்குப் பிறகு அவரது புதல்வரான மு.க.ஸ்டாலின்தான் தலைமைப் பொறுப்புக்கு முன்னிறுத்தப்பட்டுள்ளார்.
சாமானியனுக்கு எழுவது என்னவோ சின்ன சந்தேகம் தான். அது என்ன அவரவர் குடும்ப வாரிசுகள் தான் அரசியல் வாரிசுகளாக கட்சியின் அடுத்த தலைமையாக மாற வேண்டுமா என்று. வேறு தகுதி படைத்த பல முகங்களை பின்தள்ளி இந்த வாரிசுகளின் முகங்கள் ஏன் முன்னிறுத்தப்படுகின்றன என்ற ஒற்றை கேள்வி தான் எழுகிறது. கட்சி என்பது குடும்ப சொத்தா? இது எல்லா கட்சிக்கும் பொருந்தும்.
மன்னர் ஆட்சி எல்லாம் ஒழித்து தான் பெருந்தலைவர்கள் செய்த முயற்சியால் ஜனநாயகம் மலர்ந்தது. ஆனால் இப்போது ஜனநாயகம் என்ற பெயரில் மறைமுகமாக இன்னும் மன்னர் ஆட்சி தான் நடைபெறுகிறதோ!
- Inkpena சஹாயா












Click it and Unblock the Notifications